விரும்பும் பதிவைத் தேடுக !

ஊனுண்டு உழுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊனுண்டு உழுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 டிசம்பர், 2021

ஊனுண்டு உழுவை நிறம்பெறூஉம் - பாடல்.68 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (68)

-------------------------------

ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்

புல்லினான் இன்புறூஉங் காலேயம் - நெல்லின்

அரிசியான் இன்புறூஉங் கீழெல்லாந் த்த்தம்

வரிசையான் இன்புறூம் மேல்.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப்

புல்லினால் இன்புறூஉம் காலேயம்நெல்லின்

அரிசியால் இன்புறூம் கீழ் எல்லாம்; த்த்தம்

வரிசையால் இன்புறூஉம் மேல்.

 

--------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

ஊன் உணவைச் சுவைத்து  உண்பதில்  கானகம் வாழ் புலிகள்  இன்பம் காணும் !

 

ஈரநிலத்துப் பசும் புல்லைச் சுவைத்து  உண்பதில் கால்நடைகள் இன்பம் காணும் !

 

வயிறு நிறையச் சுவையான  சோற்றை உண்பதில் கீழ் மக்கள் இன்பம்  காண்பர் !

 

மேன்மக்களோ, தம் தகுதிக்கேற்ற  மதிப்புறு செயல்களைச் செய்வதில் இன்பம் காண்பர் !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

ஊன் உண்டு = ஊன் உணவை உட்கொண்டு ; உழுவை = புலி ; நிறம் பெறூஉம் = மேனியமையும் ; நீர் நிலத்து = ஈரம் பொருந்திய நிலத்திலுள்ள ; புல்லினான் = புல்லினை மேய்ந்து ; காலேயம் = ஆனிரைகள் ; இன்புறூஉம் = இன்பமடையும் ; நெல்லின் அரிசியான் = நெல்லரிசிச் சோற்றினால் ; கீழ் எல்லாம் = கீழ் மக்கள் எல்லாரும் ; இன்புறூஉம் = இன்பம் காணுவர் ; மேல் = மேன்ம்மக்கள் ; தத்தம் = தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற ; வரிசையான் = மதிப்புச் செயல்களால் ; இன்புறூஉம் = இன்பமடைவர்.

 

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

புலி ஊன் உண்டு இன்பமுறும் ; ஆன் புல்லுண்டு இன்பமுறும் ; கீழோர் சோறுண்டு இன்புறுவர் ; மேலோர் மதிப்புணர்ந்து இன்புறுவர்.

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),20]

{06-12-2021}

--------------------------------------------------------------------------------------------