விரும்பும் பதிவைத் தேடுக !

கைத்துடையான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைத்துடையான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 டிசம்பர், 2021

கைத்துடையான் காமுற்றது - பாடல்.67 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (67)

-----------------------------

கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்

முளைக்குழாம் நீருண்டேல் உண்டாந் திருக்குழாம்

ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்

துன்புறுவாள் ஆகிற் கெடும்.

 

 

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------

கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்

முளைக் குழாம் நீர் உண்டேல் உண்டாம்; திருக்குழாம்

ஒண் செய்யாள் பார்த்துறின் உண்டாகும்; மற்று அவள்

துன்புறுவாள் ஆகில் கெடும்..

 

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

செல்வச் செழுமை படைத்த மாந்தனுக்கு, அவனது வாழ்வில் அவன் விரும்பிய அனைத்தும் அட்டியின்றிக்  கிடைத்துவிடும்!

 

குவிந்து கிடக்கும் விதைகளுக்கு நீர் மட்டும் கிடைத்திடுமானால், அவற்றிலிருந்து முளைகள் வெடித்து வெளிக்கிளம்பும் !

 

செல்வத் திருமகளாம் தாமரைச் செல்வியின் அருள் கிடைத்துவிட்டால், ஏழையிடம் கூட பொருட் செல்வம் குவியத் தொடங்கும் !

 

ஆனால், அவள் எந்தவொரு மனிதனின் நடத்தை மீதாவது அருவருப்பு கொள்வாளெனில், அவனிடம் உள்ள செல்வமும் அழிந்து போகும் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

கைத்து உடையான் = கைப்பொருள் உள்ளவன் ; காமுற்றது  = விரும்பிய பொருள் ; உண்டாகும் = கிடைக்கும் ; நீர் உண்டேல் = நீர் பாய்ச்சல் உண்டானால் ; வித்தின் முளைக்குழாம் = விதைகளின் முளைக் கூட்டம் ; உண்டாம் = தோன்றும் ; ஒண் செய்யாள் = ஒளி பொருந்திய திருமகள் ; பார்த்துறின் = அருள் செய்தால் ; திருக்குழாம் உண்டாகும் = திரளான பொருட் செல்வம் பெருகும் ; அவள் = அத்திருமகள் ; துன்புறுவாளாகின் = அருவருப்பு கொண்டாள் எனில் ; கெடும் = உள்ள செல்வமும் அழியும். ;

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

செல்வம் உடையவனுக்கு அவன் விரும்பிய பொருள் எல்லாம் கிடைக்கும் ; நீர் கிடைத்தால் விதைகளிலிருந்து முளைகள் கிளம்பும் ; .திருமகள் அருள் கிடைத்தால் செல்வம் கூடும் ; அவர் அருள் நீங்கினால் உள்ள செல்வமும் கெடும்.

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),20]

{06-12-2021}

----------------------------------------------------------------------------------------------