விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 14 டிசம்பர், 2021

நான்மணிக்கடிகை - ஓர் அறிமுகம் - உரையாளர் - வை.வேதரெத்தினம் !

நான்மணிக் கடிகைஓர் அறிமுகம் !

-----------------------------------------------------------------------------------------------

நான்மணிக்கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் எனப்படும் நல்லிசைப் புலவர். நாகனார் என்னும் பெயருடைய இவர் விளம்பி என்னும் ஊரில் பிறந்தமையாலோ, இருந்தமையாலோ விளம்பி நாகனார் என்று வழங்கப்பட்டார் எனக் கொள்ளல் வேண்டும். இவர் கடைச் சங்கப் புலவர் எனக் கொள்ளப்படுதலின், இவரது காலம் கி.பி 200 –க்கு முற்பட்டதெனக் கருதலாம் !

 

இவர் இயற்றிய இந்நூலின் காப்புச் செய்யுளான் (1, 2) இவரது சமயம் வைணவம் என்பது தெளிவாகிறது !

 

நான்மணிக் கடிகைஎன்னும் இந்நூற் பெயர், நந்நான்கு வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட ஒருவகை அணிகலன் என விரியும். கடவுள் வாழ்த்து உட்பட 106 வெண்பாக்களால் இந் நூல் யாக்கப்பெற்றுள்ளது ! இவற்றுள் 103 வெண்பாக்கள் நேரிசை அல்லது இன்னிசை வெண்பாவான் அமைந்திருக்கையில் மூன்று (1, 30, 61) மட்டும்  பஃறொடை வெண்பாவான் அமைந்துள்ளன !

 

ஒவ்வொரு செய்யுளிலும் புலவர் நான்கு நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார். வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, நல்லொழுக்கம், இன்சொல், நேர்மை, அன்புடைமை, கொல்லாமை  போன்ற கருத்துகளை எடுத்துரைக்கும் நாகனார், ஓரோர் இடங்களில் முற்பிறவி புண்ணியம் (நல்வினை), பாவம் (தீவினை) ஆகிய கருத்துகளையும் உரைப்பதாக வருவது சற்று நெருடலாக உள்ளது !

 

கி.பி 500 –க்குப் பின்பு தான் தமிழ் நாட்டில் வடமொழி நுழையத் தொடங்கியது. முற்பிறவி, மறுபிறவி, புண்ணியம் (நல்வினை), பாவம் (தீவினை), வீடுபேறு (30, 59, 106)) போன்ற கருத்துகளும் புகத் தொடங்கின. ஆனால் கி.பி. 200 –க்கு முன்பே  தோன்றிய இந்நூலில் இக்கருத்துகள் இடம்பெற்றிருப்பது வியப்பைத் தருகிறது ! இஃதன்றி அசனம் (82), ஆசாரம் (96) போன்ற வடமொழிச் சொற்கள் செய்யுளில் இடம்பெற்றிருப்பதும், வியப்பூட்டுகிறது !

 

ஓலைச் சுவடிகளிலிருந்து படியெடுக்கையில் இத்தகைய இடைச்செருகல்கள் நடந்திருக்கலாம் என்பதே என் கருத்து ! எப்படியாயினும் போற்றத்தக்க கருத்துகளை உள்ளுறையாகக் கொண்டிருக்கும் இந்நூலைத் தமிழன்பர்கள் படித்து  இன்புறுவார்களாக !

 

செய்யுள்கள் பண்டைய தமிழ் நடையில் அமைந்தவை என்பதால், இக்காலத்தவர் செய்யுள்களின் பொருளை விளங்கிக் கொள்ளல் சற்றுக் கடினமானதே. அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டும் என்னும் உயரிய நோக்கில், எளிய தமிழில் தெளிவுரை தந்திருக்கிறேன். படித்துப் பயன்பெறுவீர்களாக !

 

----------------------------------------------------------------------------------------------

 

வை.வேதரெத்தினம்,

(ஓய்வு பெற்ற ஆட்சி அலுவலர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

ஓசூர்.635 110)

-----------------------------------------------------

இருப்பு: 28/25, டைட்டான் நகரியம்,

மத்திகிரி,

ஓசூர். 636 110

------------------------------------------------------

 

மின்னஞ்சல்:

Veda70.vv@gmail.com

vedarethinam76@gmail.com

------------------------------------------------------

[தி.;2052, நளி (கார்த்திகை) 28]

{14-12-2021}

----------------------------------------------------- 

இன்சொலான் ஆகுங் கிழமை - பாடல்.106 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (106)

--------------------------------

இன்சொலான் ஆகுங் கிழமை இனிப்பிலா

வன்சொலான் ஆகும் வசைமனம்மென்சொலின்

நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்

வீவிலா வீடாய் விடும்.


----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

இன்சொலால் ஆகும் கிழமை; இனிப்பு இலா

வன்சொலால் ஆகும் வசை மனம்; மென் சொலின்

நாவினால் ஆகும் அருள் மனம்; அம்மனத்தால்

வீவு இலா வீடு ஆய்விடும்.


----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

இன்சொல் பேசும் மாந்தரைச் சுற்றி, இனிமை நிலவும், நட்பும் வளரும் !

 

வன்சொல்  பயிலும்நெஞ்சினில் என்றும் வஞ்சக எண்ணம் வளரும், பெருகும் !

 

நயமிகு சொற்கள் நாவில் தவழ்ந்தால் அருளும் பரிவும் முகிழ்த்திடச் செய்யும்  !

 

அருள்மனம் பிறவிப் பயனைத் துய்த்திட, அகல்வழி காட்டும், உண்மை உணர்வீர் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

இன் சொலான் = இன்சொல்லால் ; கிழமை ஆகும் = ஒருவற்கு நட்புரிமை உண்டாகும் ; இனிப்பு இலா = இன்பமில்லாத ; வன்சொலான் = வன்சொல்லினால் ; வசை மனம் ஆகும் = கெட்ட கருத்து உண்டாகும் ; மென் சொலின் = நயமான சொல்லையுடைய ; நாவினால் = நாக்கினால் ; அருள் மனம் ஆகும் = இரக்க எண்ணம் உண்டாகும் ; அம் மனத்தான் = அவ்வருள் நெஞ்சத்தால் ; வீவு இலா = அழிவு இல்லாத ; வீடு ஆய்விடும் = வீடுபேறு உண்டாகும்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

இன்சொல்லால் நட்புரிமை உண்டாகும் ; வன் சொல்லால் கெடு நினைவு உண்டாகும் ; நயமான சொற்களால் அருள் நெஞ்சம் உண்டாகும் ; அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடு பேறு உண்டாகும்.


---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

----------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

மனைக்கு விளக்கம் மடவார் - பாடல்.105 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (105)

--------------------------------

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய

காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்

ஓதிற் புகழ்சால் உணர்வு.

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர்; மனக்கு இனிய

காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்

ஓதின் புகழ் சால் உணர்வு.

 

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

 

வீட்டுக்கு ஒளியாய்த் திகழ்பவள் நல்ல மனைவி !

 

அம்மனைவிக்கு ஒளியாய்த் திகழ்பவர்கள்  நன்மக்கள் !

 

அம்மக்களுக்கு ஒளியாய்த் திகழ்வது  அறிவூட்டும் கல்வி !

 

அக்கல்விக்கு ஒளியாய்த் திகழ்வது புகழ்சால் மெய்யுணர்வு!

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

மனைக்கு விளக்கம் = வீட்டுக்கு ஒளி ; மடவார் = பெண்கள் ; மடவார் தமக்கு = பெண்களுக்கு ; தகைசால் புதல்வர் = நல்லியல்புகள் நிறைந்த மக்கள் ஒளி ; மனக்கு இனிய = பெற்றோர் மனத்திற்கு இனிமை தரும் ; காதல் புதல்வர்க்கு = அன்பிற்குரிய மக்கட்கு ; கல்வியே = கல்வியறிவே ஒளியாகும் ; கல்விக்கும் = அக் கல்வியறிவிற்கும் ; ஓதின் = சொல்லுமிடத்து ; புகழ் சால் = புகழ் நிறைந்த ; உணர்வு = மெய்யுணர்வே ஒளியாகும்.

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------

மனைக்கு விளக்கம் நன்மனைவி ; நன்மனைவிக்கு விளக்கம் அறிவறிந்த மக்கள் ; அம்மக்கட்கு விளக்கம் கல்வி ; கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-----------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

ஒருவ னறிவானும் எல்லாம் - பாடல்.104 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (104)

---------------------------------

ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்

ஒருவ னறியா தவனும் ஒருவன்

குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்

கணன் அடங்கக் கற்றானும் இல்.

 

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

ஒருவன் அறிவானும் எல்லாம்; யாதொன்றும்

ஒருவன் அறியாதவனும்; ஒருவன்

குணன் அடங்கக் குற்றம் உளானும்; ஒருவன்

கணன் அடங்கக் கற்றானும் இல்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

 

எல்லாம் அறிந்தவன் என்று  உலகில் எவனுமே இல்லை !

 

ஒன்றுமே அறியாதவன் என்று உலகில் ஒருவனுமே இல்லை !

 

குற்றங் குறைகள் மட்டுமே உள்ளவனாக ஒருவனும் இல்லை !

 

அறியாமை  இல்லாத  அறிவாளியாக  எவனுமே இல்லை !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

எல்லாம் = எல்லாக் கலைகளையும் ; அறிவான் ஒருவனும் இல் = தெரிந்தவன் ஒருவனும் இல்லை ; யாதொன்றும் = ஒரு சிறிதும் ; அறியாதவன் ஒருவனும் இல் = தெரியாதவன் ஒருவனும் இல்லை ; குணன் அடங்க = ஒரு நல்லியல்பும் இலதாக ; குற்றம் உள்ளான் ஒருவனும் இல் = பிழையே உள்ளவன் ஒருவனும் இல்லை ; கணன் அடங்க = அறியாமை சிறிதும் இலதாக ; கற்றானும் இல் = கற்றறிந்தவனும் இல்லை.

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

எல்லாம் அறிந்தவனும் இல்லை ; ஒன்றும் அறியாதவனும் இல்லை ; குற்றமே உள்ளவனும் இல்லை ; அறியாமை இல்லாதவனும் இல்லை.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

-----------------------------------------------------------------------------------------------