விரும்பும் பதிவைத் தேடுக !

தூர்ந்து ஒழியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூர்ந்து ஒழியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

தூர்ந்தொழியும் பொய் - பாடல்.77 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (77)

-------------------------------

தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்

சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும்நல்லார்

விடுகென்ற போழ்தே விடுக உரியான்

தருகெனின் தாயம் வகுத்து.

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

தூர்ந்து ஒழியும் பொய் பிறந்த போழ்தே; மருத்துவன்

சொல்க என்ற போழ்தே பிணி உரைக்கும்நல்லார்

விடுக என்ற போழ்தே விடுக; உரியான்

தருக எனின் தாயம் வகுத்து.

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

நண்பர்களுக்கு இடையே  பொய்மை என்னும் பொல்லாங்கு புகுந்துவிட்டால், அவர்களைப் பிணைத்து வைத்திருக்கும் நட்புணர்வு அக்கணமே  அகன்றுவிடும் ! பொய்மை அழிவுக்கே வழிவகுக்கும் !

 

உனக்கு  என்ன செய்கிறது சொல் என்று மருத்துவன் கேட்கும் போது, தனது பிணியைப் பற்றிய எல்லா உண்மைகளையும் பிணியாளன் அவரிடம் சொல்லிவிட வேண்டும் ! இல்லையேல் தவறான கணிப்புக்கு இட்டுச் செல்லும் !

 

இந்தத் தீயபழக்கம், வேண்டாம், விட்டுவிடு என்று நம் நலம்நாடும் நல்லவர்கள் நம்மிடம் சொன்னால், அப்பழக்கத்தைக் அக்கணமே விட்டுவிட வேண்டும் ! இல்லையேல் உடல்நலம் உருக்குலைந்து போய்விடும் !

 

தன் பங்கைத் தனக்குக் தந்திடுமாறு  பங்காளி கேட்டால், அக்கணமே அவன் பாகத்தைப் பிரித்து அவனிடம்  கொடுத்துவிட வேண்டும் ! இல்லையேல் வழக்குக்கு வழிவகுத்து உறவைச் சீர்குலைத்துவிடும் !

 

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

பொய் பிறந்த போழ்தே = நண்பர்களுக்குள் பொய் உண்டான போதே ; தூர்ந்து ஒழியும் = நட்புக் கெட்டுப் போகும் ; மருத்துவன் = மருந்து கொடுப்போன் ; சொல்க என்ற போழ்தே = சொல் என்று சொன்ன போதே ; பிணி உரைக்கும் = நோயாளன் பிணியை உரைப்பான் ;  பெரியார் = நல்லார் ; விடுக என்ற போழ்தே = ஒரு செயலை விட்டிடுக என்று சொன்ன போதே ; விடுக = அச்செயலை விட்டிடுக ; உரியான் = ஒரு பொருளுக்கு உரியவன் ; தருக என்றல் = கொடு என்றால் ; தாயம் = அவன் பாகத்தை ; வகுத்து (விடுக) பங்கிட்டுக்  கொடுத்து விடுக.

 

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------

பொய் பிறந்த போதே நட்புக் கெடும் ; மருத்துவன்சொல்என்ற போதே பிணியாளன் நோய் பற்றிச் சொல்வான் ; பெரியார் ஒரு செயலை விடுக என்ற போதே அற விட்டொழிக ; உரியான் தருக என்ற போதே அவன் பங்கை வகுத்துத் தந்து விடுக.

 

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

---------------------------------------------------------------------------------------------