விரும்பும் பதிவைத் தேடுக !

மாசு படினும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாசு படினும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2021

மாசு படினும் மணிதன்சீர் - பாடல்.100 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (100)

--------------------------------

மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம்

பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்

பாசத்துள் இட்டு விளக்கினுங் கீழ்தன்னை

மாசுடைமை காட்டிவிடும்

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------

மாசு படினும் மணி தன் சீர் குன்றாதாம்;

பூசிக் கொளினும் இரும்பின்கன் மாசு ஒட்டும்;

பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ் தன்னை

மாசு உடைமை  காட்டிவிடும்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

முத்து பவளம் போன்ற ஒளிமணிகளின் மீது அழுக்குப் படிந்தாலும், அவற்றின் பெருமை ஒருபோதும் குறையவே குறையாது !

 

எத்துணைதான் கழுவிக் கழுவி  எடுத்து வைத்தாலும், இரும்பின் மீது துரு என்னும் மாசு படிந்து, அதன் மதிப்பைக் குறைத்திடவே செய்கிறது !

 

கைகளுக்கு விலங்கிட்டுப் பிணித்து ஒறுத்தாலும், கீழ்மக்கள் தம் கீழ்மைத் தனத்தைக் எப்போதும் காட்டிடவே செய்திடுவர் !

 

அல்லாமல் அறிவுரை கூறி விளக்கினாலும் அவர்கள் தம் கீழ்மைத் தனத்தை, கைவிடாமல், வெளிப்படுத்தவே செய்திடுவர் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

மாசு படினும் = அழுக்குப் பட்டாலும் ; மணி தன் சீர் குன்றாது = நன்மணி தன் பெருமை குன்றாது ; பூசிக்கொளினும் = கழுவி எடுத்துக் கொண்டாலும் ; இரும்பின்கண் = இரும்பினிடத்தில் ; மாசு ஒட்டும் = அழுக்குச் சேரும் ; கீழ்தன்னை = கீழ்மகனை ; பாசத்துள் இடினும் = தளையிட்டு ஒறுத்தாலும் (மாசு உடைமை காட்டிவிடும்) = கீழ்மை இயல்பையே காட்டிவிடுவான் ; விளக்கினும் = அல்லது அறிவு கூறி விளக்கினாலும் ; மாசு உடைமை காட்டிவிடும் = கீழ்மை இயல்பையே கட்டிவிடுவான்.


----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

அழுக்குச் சேர்ந்தாலும் நன்மணியின் பெருமை குறையாது ; கழுவி எடுத்துக்கொண்டாலும் இரும்பின்கண் மாசுண்டாகும் ; கீழ்மக்களை ஒறுத்தாலும் அவர்கள் தன் கீழ்மைத் தன்மையையே காட்டுவார்கள் ; அன்றி அறிவு கூறி விளக்கினாலும், அக்கீழ்மையையே காட்டுவார்கள்.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை”  வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

-----------------------------------------------------------------------------------------------