விரும்பும் பதிவைத் தேடுக !

குழித்துழி நிற்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழித்துழி நிற்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 நவம்பர், 2021

குழித்துழி நிற்பது நீர் தன்னைப் - பாடல்.31 - வை.வேதரெத்தினம் உரை !

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக் கடிகை, பெரும்புலவர் விளம்பி நாகனார் என்பவர் படைத்தது.  சங்க கால இலக்கியமான இந்நூல் அறநெறிக் கருத்துகளை எடுத்துரைக்கிறது ! கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 106 பாடல்கள் உள்ளன ! இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (31)

--------------------------

 

குழித்துழி   நிற்பது   நீர்;தன்னைப்   பல்லோர்

பழித்துழி   நிற்பது   பாவம்;    அழித்துச்

செறிவழி   நிற்பது   காமம்;   தனக்கொன்று

உறுவுழி   நிற்பது  அறிவு.

 

------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-----------------

 

பள்ளம் எங்கிருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று  தேங்கி நிற்பது தான் தண்ணீரின்  இயல்பு !

 

சான்றோர்  பழிக்கும்   செயல்களைப் புரிகின்ற  கீழ்மக்களிடத்தில் தீவினைகள் குடிகொண்டிருப்பதும்  இயல்பு !

 

தவநெறியில் ஒழுகும் தூய  வாழ்வு  இல்லாத மக்களிடத்தில் காம உணர்வு  மேலோங்கி நிற்பதும் இயல்பு !

 

அதுபோல், ஒருவனுக்கு இடர் வரும்போது  அவனுக்குத் துணையாக  அவனது அறிவு நிற்பதும் இயல்பு !

------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நீர் குழித்துழி நிற்பது = தண்ணீர் குழிக்கப்பட்ட இடத்தில் நிற்கும் இயல்பு உடையது ; பல்லோர் = சான்றோர் பலரும் ; தன்னைப் பழித்துழி = பழிக்கும்   செயல்களைப் புரிகின்ற  கீழ்மக்களிடத்தில் ; பாவம் = தீவினை என்பது ; நிற்பது = சூழ்ந்து நிற்கும் இயல்புடையது ; அழித்து = தவ நெறியைக் கெடுத்து ; செறிவுழி = தீய நெறியில் வயப்பட்டால்  ;  காமம் =  காம உணர்வு ; நிற்பது = மேலோங்கி நிற்பது இயல்பு ; தனக்கு  = அறிஞன் ஒருவனுக்கு ;  ஒன்று உறுவுழி = ஓர் இடர் உண்டான காலத்தில் ; அறிவு = அவனது கல்வியறிவு ; நிற்பது = துணையாய் நிற்கும் இயல்பு உடையது.

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

 

பள்ளம் உள்ள இடத்தில் நீர் நிற்கும்;  பலரும் பழிக்கும் தீயோரிடத்தில்  பாவம் நிற்கும் ; தவ ஒழுக்கம் இல்லாதவன் பால், காமம் நிற்கும் ; இடர்வந்த போழ்து கற்ற அறிவு துணை நிற்கும்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}

------------------------------------------------------------------------------------------------