விரும்பும் பதிவைத் தேடுக !

கன்றாமை வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்றாமை வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 நவம்பர், 2021

கன்றாமை வேண்டும் கடிய - பாடல்.13 - வை.வேதரெத்தினம் உரை !

 

முற்றிலும் வெண்பாக்களால் யாக்கப் பெற்ற நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 106  செய்யுள்கள்  உள்ளன . கடைச்சங்க காலத்ததான இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு வகையைச் சார்ந்தது ! இதிலிருந்து ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (13).

-------------------------------

 

கன்றாமை வேண்டுங்  கடிய  பிறர்செய்த

நன்றியை நன்றாக்  கொளல்வேண்டும்  என்றும்

விடல்வேண்டுந்  தங்கண்  வெகுளி  அடல்வேண்டும்

ஆக்கஞ்  சிதைக்கும் வினை.

-----------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------------

 

பிறர் செய்கின்ற அஞ்சத்தக்கக, கடுஞ் செயல்களை நினைந்து நினைந்து மனதில் கறுவாமை  (மன வயிரம் கொள்ளாதிருத்தல்) வேண்டும் !

 

பிறர் நமக்குச் செய்யும் நன்மைகளை ஒருபோதும் மறவாமல் என்றும் நன்றியுடன் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் !

 

காரணம் எதுவாயினும், ம்மிடம் உண்டாகும்  பெரும் சினத்தை  வளரவிடாமல் மனதைவிட்டு நீக்குதல் வேண்டும் !

 

அதுபோல், முற்போக்கான  செயல்களைக் கெடுத்து  அழித்துவிடும் தவறான  முயற்சிகளை முற்றாக ஒழித்துவிட வேண்டும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------------

கடிய = பிறர் செய்கின்ற அஞ்சத்தக்க கடுஞ் செயல்களை ; கன்றாமை வேண்டும் = நினைந்து நினைந்து கறுவாமை வேண்டும் ; பிறர் செய்த நன்றியை = பிறர் செய்யும் நன்மைகளை ; நன்றா = பெரிதும் ; கொளல் வேண்டும் = நினைவிலிருத்தல் வேண்டும் ; தங்கண் வெகுளி = தம்மிடம் உண்டாகும் பெருஞ் சினத்தை ; என்றும் = எப்பொழுதும் ; விடல் வேண்டும் = நீக்குதல் வேண்டும் ; ஆக்கம் = முற்போக்கை ; சிதைக்கும் வினை = கெடுக்கும் தொழிலை ; அடல் வேண்டும் = ஒழித்தல் வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------

பிறர் செய்த தீமைகட்காக அவரைக் கறுவாமை வேண்டும்; ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும்; சினத்தைக் கைவிடல் வேண்டும்; முற்போக்கைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்துவிட வேண்டும் !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

-------------------------------------------------------------------------------------------------