விரும்பும் பதிவைத் தேடுக !

சொல்லான் அறிப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்லான் அறிப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

சொல்லான் அறிப வொருவனை - பாடல்.80 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (80)

------------------------------

சொல்லான் அறிப வொருவனைமெல்லென்ற

நீரான் அறிப மடுவினையார்கண்ணும்

ஒப்புரவினான் அறிப சான்றாண்மைமெய்க்கண்

மகிழான் அறிப நறா.

 

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

சொல்லால் அறிப ஒருவனை; - மெல்லென்ற

நீரால் அறிப மடுவினை; - யார்கண்ணும்

ஒப்புரவினால் அறிப சான்றாண்மை; - மெய்க்கண்

மகிழான் அறிப நறா.

 

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

 

மனிதர்களில் நல்லவர்கள் இருப்பது போல் கெட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இனம் பிரித்து அறிவது எப்படி ? அவர்கள் வாயிலிருந்து வெளிவரும்  சொற்களை வைத்தே அறிஞர்கள் அவர்களின் தன்மையை அறிந்துவிடுவார்கள் !

 

குளத்து நீரின் சுவை, அந்தக்குளம் அமைந்திருக்கும் மண்ணின் தன்மையைப் பொறுத்து அமைகிறது. நீர் தெளிவாக இருக்கிறதா, கலங்கலாக இருக்கிறதா, பாசி படிந்திருக்கிறதா போன்றவற்றை வைத்து அறிஞர்கள் நீரின்சுவையைத் தெரிந்து கொள்வார்கள் !

 

பிறரிடத்தில் ஒருவன்  பழகும் தன்மையை வைத்து - நடுநிலை தவறா  நடத்தையைக் கணித்து -  ஒற்றுமை போற்றும் உயரிய புரிதலை வைத்துஅவனது சான்றாண்மையை அறிஞர்கள் தெரிந்துகொள்வார்கள் !

 

அதுபோல், ஒருவன் மது அருந்தியிருக்கிறானா என்பதை அவனது முகத்தில் வெளிப்படும் எக்களிப்புக்  குறிப்புகளையும், உடல்மொழியால் வெளிப்படுத்தும் பேருவகை உணர்வுகளையும் வைத்து அறிஞர்கள் தெரிந்து கொள்வார்கள் !

 

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

 

ஒருவனை = ஒருவனுடைய நன்மை தீமைகளை ; சொல்லான் = அவன் கூறும் சொற்களாலேயே ; அறிப = அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள் ; மடுவினை = மடுவின் மண்ணின் இனிமையை ; மெல்லென்ற = மென்மையான ; நீரான் அறிப = நீரினால் அறிவார்கள் ; சான்றாண்மை = ஒருவனது பெருந்தகைமையை ; யார் கண்ணும் = யாரிடத்திலும் காட்டும் ; ஒப்புரவின் = ஒருபடியான நன்மைத் தன்மையினால் ; அறிப = அறிவார்கள் ; நறா = கள் குடியை ; மெய்க்கண் (குடித்தானது) உடம்பின்கண் ; மகிழான் அறிப = களிப்புக் குறிகளால் அறிவார்கள்.

 

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------------

 

ஒருவன் நிலையை அறிஞர்கள் அவன் சொல்லினாலேயே அறிவார்கள் ; மடுவின் மண்ணின் இனிமையை அதன் தெளி நீரினால் அறிவார்கள் ; பெருந்தன்மையை யார்மாட்டும் ஒப்ப நடக்கும் நடுவு நிலையால் அறிவார்கள்; கட்குடியை மெய்க்களிப்பால் அறிவார்கள்.

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

---------------------------------------------------------------------------------------------