விரும்பும் பதிவைத் தேடுக !

திரியழல் காணின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரியழல் காணின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 டிசம்பர், 2021

திரியழல் காணின் தொழுப - பாடல்.66 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (66)

-----------------------------

திரியழல் காணின் தொழுப விறகின்

எரியழல் காணின் இகழ்பஒருகுடியில்

கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்

இளமைபா ராட்டு முலகு.

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

திரி அழல் காணின் தொழுப; விறகின்

எரி அழல் காணின் இகழ்பஒரு குடியில்

கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்

இளமை பாராட்டும் உலகு.

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

வீட்டில் பயன்படுத்தும் கைவிளக்கின் (பூசையறை விளக்கு) திரியிலிருந்து எழும்  சுடர் மிகச் சிறியதுதான்; ஆனாலும் அந்தச் சுடரைப் பார்க்கும் போது அதை உயர்வாக மதித்து மக்கள் கைகூப்பி வணங்குகின்றனர் !

 

அடுப்பில் இடப்பட்ட விறகிலிருந்து எழும் தீச்சுடர் அளவில் பெரியதுதான்: ஆனாலும் அதைக் காணும் மக்கள் கைகூப்பித் தொழுவதில்லை; மாறாக இகழ்வாகவே எண்ணி நோக்குகிறார்கள் !

 

ஒருகுடும்பத்தில் பிறந்திருக்கும் மூத்த பிள்ளை பள்ளிக்கே செல்லாதவன்; படிப்பறிவு இல்லாதவன்; அகவையில் மிக முதிர்வானவன்; அதற்காக அவனை ஊர்மக்கள் போற்றிப் பாராட்டுவதில்லை !

 

ஆனால், அந்தக் குடும்பத்தில் பிறந்திருக்கும் இளைய பிள்ளை படித்தவன்; கல்வியறிவு நிறைந்தவன்; அகவையில் சிறியவனானாலும், இந்த உலகம் அவனைத் தான் போற்றிப் பாராட்டுகிறது ! அறிவுக்குத் தான் பாராட்டு – அகவைக்கு அன்று !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

திரி அழல் காணின் = விளக்குத் திரியில் எரியும் சுடரைக் கண்டால் ; தொழுப = அது சிறிதாய் இருப்பினும் உலகத்தார் கைகூப்பி வணங்குவர் ;  விறகின் = விறகிலே ; எரி அழல் காணின் = எரியும் சுடரைக் கண்டால் ; இகழ்ப = அது பெரிதாய் இருப்பினும் உலகத்தார் மதியாது இகழ்வர் ; ஒரு குடியில் = ஒரு குடும்பத்தில் ; கல்லாது = படிக்காமல் ; மூத்தானை = ஆண்டு முதிர்ந்து விட்டவனை ; கைவிட்டு = மதியாமல் விடுத்து ; கற்றான் = படித்தவனது ; இளமை = இளமைப் பருவத்தையே ; உலகு பாராட்டும் = உலகத்தார் பாரட்டுவர்.

 

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

திரியில் எரியும் சுடரைக் கண்டால் அது சிறிதாய் இருப்பினும் உலகத்தார் தொழுவர் ; விறகில் எரியும் சுடரை, அது பெரிதாய் இருப்பினும்  தொழாது இகழ்வர் ; ஒரு குடும்பத்திலேயே படியாதவன் மூத்தவனாயினும் மதியார் ; படித்தவன் இளைஞாயினும் பாராட்டுவர்.

----------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),18]

{04-12-2021}

----------------------------------------------------------------------------------------------