விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 18 நவம்பர், 2021

பொய்த்தல் இறுவாய நட்புக்கள் - பாடல்.19 - வை.வேதரெத்தினம் உரை !

 

ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைப்பதால் நான்மணிக் கடிகை என்னும் பெயர் பெற்று விளங்கும் இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் ! பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச் சார்ந்த  இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் இருக்கின்றன ! அவற்ருள் ஒரு பாடல் இதோ !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (19).

-------------------------------

 

பொய்த்தல்  இறுவாய  நட்புக்கள்  மெய்த்தாக

மூத்தல்  இறுவாய்த்  திளைநலந்   தூக்கில்

மிகுதி  இறுவாய  செல்வங்கள்  தத்தம்

தகுதி  இறுவாய்த்  துயிர்.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

 

பொய்த்தல்  இறுவாய  நட்புக்கள்;  மெய்த்தாக

மூத்தல்  இறுவாய்த்து  இளைநலம்;  தூக்கில்

மிகுதி  இறுவாய  செல்வங்கள்;  தத்தம்

தகுதி  இறுவாய்த்து  உயிர்.

 

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

 

ஆராய்ந்து பார்த்தால், நமது  நட்புகள் எல்லாம் பொய்மை ஒழுக்கம் புகும்போது கெட்டு அழிந்து  போகின்றன !

 

இளமையின் வனப்பு  துடிப்பு,  ஈர்ப்பு எல்லாமே வாழ்நாளில் நம் கண்ணுக்கு எதிரிலேயே மூப்பினால் அழிந்து போகின்றன  !

 

ஆசைக்கு ஆட்பட்டு அகலக் கால் வைத்தால்,  எத்துணைச் செல்வம் இருந்தாலும்,  அவை   அனைத்தும்  கெட்டழிந்து போகின்றன !

 

அதுபோல், மனிதர்களின்   உயிர் வாழ்நாள் என்னும் எல்லையின் இறுதியை அடையும் போது  உடலைப்  பிரிந்து அழிந்துபோகிறது !

 

-------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------------

நண்பர்கள் தமக்குள் பொய்யொழுக்கம் புகும்போது, அவர் நட்புக் கெடும் ;   மூப்புத் தோன்றியதும்,  இளமை நலம் கெடும் ;  மீறிய செயல்களைத் தொடங்கியதும்   செல்வம் கெடும் ;  வாழ்நாள் எல்லையை அடைந்ததும் உயிரும் கெடும்  !

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

 

தூக்கில்  =  ஆராந்து பார்த்தால் ;  நட்புகள்  =  நேசங்கள்  ;  பொய்த்தல் இறுவாய  =  பொய்யொழுக்கமாகிய இறுதியை உடையன ;  இளைநலம் =  இளமையின் அழகு ;  மெய்த்தாக  =  கண்ணுக்கு நேராக  ;  மூத்தல் இறுவாய்த்து  =  மூப்பாகிய இறுதியை உடையது ;  செல்வங்கள் =  பொருட்செல்வமும் செல்வாக்கும் ;  மிகுதி இறுவாய  =  மிகையான செயல்களை இறுதியாக உடையன ;  உயிர் = மக்கள் உயிர் ;  தத்தம் தகுதி இறுவாய்த்து =  தத்தமது வாழ்நாள் எல்லையை இறுதியாக உடையது.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------

நண்பர்கள் தமக்குள் பொய்யொழுக்கம் நேர்ந்ததாயின் அவர் நட்புக் கெடும் ; மூப்புத் தோன்றியதும் இளமை நலம் கெடும் ; மீறிய செயல்களைச் செய்யத் தொடங்கியதும் செல்வம் கெடும் ; வாழ்நாள், எல்லை கண்டதும் உயிர் கெடும் (மடியும்)

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

----------------------------------------------------------------------------------------------

 

கடற் குட்டம் போழ்வர் கலவர் - பாடல்.18 - வை.வேதரெத்தினம் உரை !

 

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப் பெற்ற இலக்கியங்களைத் தவிர்த்து, எஞ்சிய பல இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வகைப்படுத்தப் பெற்றுள்ளன; அவற்றுள் ஒன்று தான் நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைப்பதால் இந்நூல் நான்மணிக் கடிகை என வழங்கப்பெறுகிறது !  இதிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (18).

-----------------------------

கடற்குட்டம்  போழ்வர்  கலவர்  படைக்குட்டம்

பாய்மா  உடையான்  உடைக்கிற்குந்  -  தோமில்

தவக்குட்டந்  தன்னுடையான்  நீந்தும்  அவைக்குட்டம்

கற்றான்  கடந்து  விடும்.

-------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------------

 

கடல்குட்டம்  போழ்வர்  கலவர்;  படைக்குட்டம்

பாய்மா  உடையான்  உடைக்கிற்கும்;  -  தோம் இல்

தவக்குட்டம்  தன்உடையான்  நீந்தும்;  அவைக்குட்டம்

கற்றான்  கடந்து  விடும்.

-------------------------------------------------------------------------------------------

குட்டம் = ஆழம்;  ஆழம் உடைய கடல்

-------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

படகு, தோணி, நாவாய்,  போன்ற மரக்கலம்  உடையவர்கள்  ஆழமான கடலாக இருந்தாலும் கூட, அதன் நீரைப் பிளந்து கொண்டு செல்வார்கள் !

 

காற்று போல் கடிது செல்லும் படைக் குதிரையை உடைய வீரன், பகைவரது படை என்னும் கடலின் கரையை  உடைத்துக் கொண்டு செல்வான் !

 

மனதைத் தன்வயப்படுத்தும் வல்லமை உடையவன், குற்றங் குறைகளற்ற தவம் என்னும் ஆழ்கடலை  நீந்திக் கரையேறுவான் !

 

அதுபோல், தெள்ளத் தெளிவாகக் கல்வி கற்றவன், கற்றறிந்த அறிஞர்கள் நிறைந்த  அவை என்னும் ஆழ்கடலை எளிதில் எதிர்கொண்டு கடந்து செல்வான் !

-------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------------

கலவர் = மரக்கலம் உடையவர்   ; கடல் குட்டம்  =  கடலின் ஆழமான நீரை  ;  போழ்வர்  =  பிளந்து செல்வர்  ; பாய்மா உடையான்  =  காற்று போல் கடிது செல்லும் வலிமையான குதிரையை உடைய வீரன்  ;  படைக்குட்டம்  =  பகைவரது படை என்னும் ஆழ்கடலின் கரையை  ;  உடைக்கிற்கும்  =  போரிட்டு உடைத்து விடுவான்  ;  தன் உடையான்  =  தன் மனதைத் தன்வயப்படுத்தியவன்  ;  தோம் இல்  =  குற்றமில்லாத  ;  தவக்குட்ட  =  தவம் என்னும் ஆழ்கடலை  ;  நீந்தும்  =  நீந்திக் கரையேறுவான்  ;  கற்றான்  =  தெளியக் கற்றவன்  ;  அவைக்குட்டம்  =  கற்றறிவுடையோர் நிரம்பிய  அவை என்னும் கடலை  ;  கடந்துவிடும்  =  எதிர்கொண்டு கடந்து செல்வான்.

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

மாலுமிகள் நீர்க்கடலையும், மறவர் படைக் கடலையும், தற்காப்புடையான் தவக்கடலையும், கற்றான் அவைக் கடலையும் கடத்தல் எளிது !

 

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

-------------------------------------------------------------------------------------------

 

இன்னாமை வேண்டின் இரவெழுக - பாடல்.17 - வை.வேதரெத்தினம் உரை !

 

நாகனார் என்னும் பெரும்புலவர் விளம்பி என்னு ஊரைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் விளம்பி நாகனார் என அவர் அழைக்கப்படுகிறார் ! இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய  நான்மணிக்கடிகை என்னும் நூல் பல அரிய கருத்துகளை நமக்கு எடுத்துரைக்கிறது !  அதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (17)

------------------------------

 

இன்னாமை வேண்டின் இரவெழுக; இந்நிலத்து

மன்னுதல் வேண்டின்  இசைநடுக; - தன்னோடு

செல்வது வேண்டின்  அறஞ்செய்க;  வெல்வது

வேண்டின்  வெகுளி விடல்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

 

இழிவானவன் என்னும்  பெயரைத்  தேடிக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ அவன் தன்னிடம் போதுமான செல்வம் இருந்தும் கூட பேராசை மீக்கூரப்  பிச்சை எடுக்கும் தொழிலை  மேற்கொள்ளலாம் !

 

இந்த உலகத்தில் என்றென்றும்  நிலைபெற்று  விளங்குதலை எவனொருவன் விரும்புகிறானோ, அவன் புகழ் விளைக்கும்  செயல்களை மேற்கொள்ளலாம் !

 

தான் செல்லுமிடமெல்லாம் தனக்குத் துணையாக ஒரு பாதுகாப்புக் கவசம்  தேவை  என்று எவனொருவன் விரும்புகிறானோ, அவன் அறச் செயல்களில்  ஈடுபடுவதை மேற்கொள்ளலாம் !

 

அதுபோல், பிறரை வெற்றி கொண்டு தன்பால் ஈர்த்துக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ, அவன் சினம் (கோபம்) கொள்வதை  முற்றிலுமாக விட்டுவிடல் வேண்டும் !

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------------

இன்னாமை வேண்டின் = இழிவை ஒருவன் விரும்பினால்  ;  இரவு எழுக  =  இரந்து (பிச்சை எடுத்து) உண்பதை மேற்கொள்க  ;  இந்நிலத்து = இவ்வுலகில் ; மன்னுதல் வேண்டின்  =  நிலையான பெயர் பெற்று விளங்க விரும்பினால்  ;  இசை நடுக  =  புகழ் தரும் செயல்களில் ஈடுபடுக  ;  தன்னோடு செல்வது வேண்டின்  =  தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால்  ;   அறம் செய்க  =  அறச் செயல்களை மேற்கொள்க  ;   வெல்வது வேண்டின்  =  பிறரை வெல்ல விரும்பினால்  ;  வெகுளி விடல்  =  சினம்  (கோபம் ) கொள்வதை விட்டுவிடுக.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

இழிவை விரும்பினால் இரந்துண்க ;  அழியாமை வேண்டினால் புகழ் தரும் செயல்களைப் புரிக ; உறுதுணையை வேண்டினால் அறம் செக ; வெல்லல் விரும்பினால் வெகுளியைக் கைவிடுக !


---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

----------------------------------------------------------------------------------------------