விரும்பும் பதிவைத் தேடுக !

மகனுரைக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகனுரைக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

மகனுரைக்குந் தந்தை நலத்தை - பாடல்.71 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (71)

---------------------------------

மகனுரைக்குந் தந்தை நலத்தை ஒருவன்

முகனுரைக்கு முண்நின்ற வேட்கைஅகல்நீர்ப்

புலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு

வானம் உரைத்து விடும்.

 

--------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------------------------------------------

மகன் உரைக்கும் தந்தை நலத்தை; ஒருவன்

முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை; – அகல் நீர்ப்

புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு

வானம் உரைத்துவிடும்.

 

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

ஊரார் பழிக்கும் வகையில் வாழாமல் ஒழுக்கத்துடன் வாழும் புதல்வனின் வாழ்க்கை முறையே, அவனது தந்தையின் வளர்ப்பு நலத்தைக் காட்டிவிடும் !

 

ஒரு மனிதனின் நெஞ்சுக்குள்  மறைந்து கிடக்கும் அவாவினை அவனது முகத்தில் வெளிப்படும் குறிப்புகளே பிறருக்குக்  காட்டிக்கொடுத்து விடும் !

 

கழனியில் விளைச்சல் எப்படியிருக்கும் என்பதை அன்றாடம் வயலுக்குச் சென்று கண்காணித்து வரும் உழவனே பிறருக்குச் சொல்ல முடியும் !

 

ஊரில் வாழும் மக்களின் நல்லியல்பு, தீயவியல்புகளை, அவ்வூரில் பெய்யும் மழையின் அளவே உலகுக்கு உரைத்துவிடும் !

 

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

மகன் = புதல்வன் ; தந்தை நலத்தை = தன் தந்தையின் நன்மையை ; உரைக்கும் = தனது நல்லியல்பினால் பிறருக்கு அறிவிப்பான் ; ஒருவன் முகம் = ஒரு மனிதனுடைய முகம் ; உள் நின்ற வேட்கை = நெஞ்சினுள் உள்ள விருப்பத்தை ; உரைக்கும் = பிறருக்குத் தனது குறிப்பினால் அறிவிக்கும் ; அகல் = அகன்ற ; நீர்ப்புலத்து இயல்பு = நீரால் விளையும் வயலின் இயல்பை ; புக்கான் உரைக்கும் = அந்த நிலத்துக்கு உரியவன் அறிவிப்பான் ; நிலத்து இயல்பு = உலகத்தார் இயல்பை ; வானம் உரைத்துவிடும் = மழையின் நிலை அறிவித்துவிடும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பினால் அறிவிப்பான் ; ஒருவன் நெஞ்சிலுள்ள விருப்பத்தை அவன் முகக் குறிப்பே அறிவித்துவிடும் ; வயலின் தன்மையை நில உரிமையாளன் அறிவித்துவிடுவான் ; நிலத்து மக்கள் இயல்பை அந் நிலத்தில் பெய்யும் மழையின் நிலை அறிவித்துவிடும்.

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ

[தி.:2052,நளி (கார்த்திகை),26]

{12-12-2021}

--------------------------------------------------------------------------------------------