விரும்பும் பதிவைத் தேடுக !

நலனும் இளமையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நலனும் இளமையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

நலனும் இளமையும் நல்குரவின் கீழ் - பாடல்.83 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (83)

---------------------------------

நலனும் இளமையு நல்குரவின் கீழ்ச்சாம்

குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம்

வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்

பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு.

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

நலனும் இளமையும் நல்குரவின் கீழ் சாம்;

குலமும் குடிமையும் கல்லாமைக் கீழ் சாம்;

வளம் இல் குளத்தின் கீழ் நெல் சாம்; பரம் அல்லாப்

பண்டத்தின் கீழ் சாம் பகடு. .

 

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

அழகும் இளமையும் வாழ்வில் சுவைத்து மகிழவேண்டியவை. ஆனால் நல்குரவு என்னும் வறுமையில் பிடியில் மனிதன் அகப்பட்டுப் போனால், இவை இரண்டுமே மங்கிப் போகும் !

 

குலத்துக்கான உயர்வும், ஒழுக்கமும் அந்தக் குலத்தில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் பெருமை தரக்கூடியவை. ஆனால் கல்லாமை என்னும் புதைசேறு இவை இரண்டையும் அழித்துவிடும் !

 

நீர்வளம்தான் நெற்பயிருக்கு ஊட்டம் தருவது. ஆனால் நீர் வரத்து இல்லாத குளத்தை (ஏரியை) நம்பிச்  செய்யப்பட்டிருக்கும்  வேளாண்மை பொய்த்துப் போகும்; நெற்பயிர் சாவியாகும் !

 

வண்டிச்  சுமைகளை  இழுத்துச்  செல்லும்  எருதுகளின் திறனுக்கும்  ஒரு வரம்புண்டு. அளவு கடந்து  ஏற்றினால், சுமை  தாங்க முடியாமல் அந்த எருதுகள் மூச்சுத் திணறி  இறந்துபோகும் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------------

 

நலனும் = அழகும் ; இளமையும் = இளமை இயல்பும் ; நல்குரவின் கீழ் = வறுமைக்கண் ; சாம் = மங்கும் ; குலனும் = குலத்துயர்வும் ; குடிமையும் = குலத்து ஒழுக்கமும் ; கல்லாமைக் கீழ் = கல்லாமைக்கண் ; சாம் = கெடும் ; வளம் இல் = நீர் வருவாய் இல்லாத ; குளத்தின் கீழ் = ஏரியின் கீழ் விளையும் ; நெல் சாம் = நெற்பயிர் சாவியாம் ; பரமல்லா = சுமத்தல் ஆற்றாத ; பண்டத்தின் கீழ் = சுமைப்பொருளின் கீழ் தாங்கும் ; பகடு சாம் = எருதுகள் சாகும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------------

 

அழகும் இளமையும் வறுமையிற் கெடும் ; குலத்துயர்வும் குலத்தொழுக்கமும் கல்லாமையிற் கெடும் ; வருவாயற்ற ஏரியின் கீழ் விளையும் நெற்பயிர் சாவியாம் ; சுமக்கமுடியாத சுமையைத் தாங்கும் எருதுகள் சாகும்.

 

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

----------------------------------------------------------------------------------------------