விரும்பும் பதிவைத் தேடுக !

கள்ளாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கள்ளாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

கள்ளாமை வேண்டும் கடிய - பாடல்.88 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (88)

------------------------------

 

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்

தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன

நள்ளாமை வேண்டுஞ் சிறியரோடு யார்மாட்டும்

கொள்ளாமை வேண்டும் பகை.

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

 

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்;

தள்ளாமை வேண்டும் தகுதி உடையன;

நள்ளாமை வேண்டும் சிறியரோடு; யார்மாட்டும்

கொள்ளாமை வேண்டும் பகை.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

 

அறிவுடைமையோடு திட்டமிட்டுச் செய்தாலும், பிறர் பொருளைத் திருடுவது, வெளியில் தெரியாமற் போகாது. தெரிந்த பின்பு  கொடுந் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; ஆகையால் எந்த மனிதனும் களவில் ஈடுபடலாகாது !

 

நல்ல பழக்க வழக்கங்கள் நமது தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான ஏணியாகப் பயன்படும். நாம் வாழ்வில் ஏற்றம் பெற உதவும் ஏணி என்று தெரிந்த பின்பும், நல்ல பழக்க வழக்கங்களைத் தவிர்க்கலாகாது; அவற்றைப்  பின்பற்றலே பெருமை தரும் !

 

புல்லறிவு மிக்க சிற்றினத்தாரோடு பொழுதைக் கழித்தலும் அவர்களுடன்  நட்புக் கொள்ளுதலும் நமக்கு இழிவைக் கொண்டுவந்து சேர்க்கும்; அவர்களைப் புறந்தள்ளலே அறிவுடைமையாகும்; கூடா நட்பு கேடாய் முடியும் !

 

பகையை வளர்த்துக் கொள்ளல், ஒருவனது  குலத்தையே வேரறுத்துவிடும்; அறிவுடையோர்  யாரிடத்திலும் பகைமை பாராட்டமாட்டார்; பகையை வளர்ப்பதும் பாம்புக்குப் பால் வார்ப்பதும் ஒன்றே. எனவே யாரிடத்திலும் பகைமை பாராட்டாதீர் !

 

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

 

கடிய = அஞ்சத் தக்க துன்பங்கள் ; வருதலால் = பின்பு வருதலால் ; கள்ளாமை வேண்டும் = பிறர் பொருளைத் திருடாமை வேண்டும் ; தகுதியுடையன = தமக்குத் தகுதியுடைய ஒழுக்கங்களை; தள்ளாமை வேண்டும் = தவிராமை வேண்டும் ; சிறியாரோடு = சிற்றினத்தாரோடு ; நள்ளாமை வேண்டும் = நட்புக் கொள்ளாமை வேண்டும் ; யார்மாட்டும் = யாரிடத்திலும் ; பகை = பகையை ; கொள்ளாமை வேண்டும் = பாராட்டாமை வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

 

கொடுந்துன்பங்கள் பின்பு உண்டாதலால் என்றும் திருடாமை வேண்டும் ; தகுதியுடைய ஒழுக்கங்களைத் தவிராமை வேண்டும் ; சிற்றினத்தாரோடு சேராமை வேண்டும் ; யாரிடத்திலும் பகை கொள்ளாமை வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

---------------------------------------------------------------------------------------------