விரும்பும் பதிவைத் தேடுக !

மனைக்கு விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனைக்கு விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2021

மனைக்கு விளக்கம் மடவார் - பாடல்.105 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (105)

--------------------------------

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய

காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்

ஓதிற் புகழ்சால் உணர்வு.

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர்; மனக்கு இனிய

காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்

ஓதின் புகழ் சால் உணர்வு.

 

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

 

வீட்டுக்கு ஒளியாய்த் திகழ்பவள் நல்ல மனைவி !

 

அம்மனைவிக்கு ஒளியாய்த் திகழ்பவர்கள்  நன்மக்கள் !

 

அம்மக்களுக்கு ஒளியாய்த் திகழ்வது  அறிவூட்டும் கல்வி !

 

அக்கல்விக்கு ஒளியாய்த் திகழ்வது புகழ்சால் மெய்யுணர்வு!

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

மனைக்கு விளக்கம் = வீட்டுக்கு ஒளி ; மடவார் = பெண்கள் ; மடவார் தமக்கு = பெண்களுக்கு ; தகைசால் புதல்வர் = நல்லியல்புகள் நிறைந்த மக்கள் ஒளி ; மனக்கு இனிய = பெற்றோர் மனத்திற்கு இனிமை தரும் ; காதல் புதல்வர்க்கு = அன்பிற்குரிய மக்கட்கு ; கல்வியே = கல்வியறிவே ஒளியாகும் ; கல்விக்கும் = அக் கல்வியறிவிற்கும் ; ஓதின் = சொல்லுமிடத்து ; புகழ் சால் = புகழ் நிறைந்த ; உணர்வு = மெய்யுணர்வே ஒளியாகும்.

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------

மனைக்கு விளக்கம் நன்மனைவி ; நன்மனைவிக்கு விளக்கம் அறிவறிந்த மக்கள் ; அம்மக்கட்கு விளக்கம் கல்வி ; கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-----------------------------------------------------------------------------------------------