விரும்பும் பதிவைத் தேடுக !

எள்ளற் பொருளது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எள்ளற் பொருளது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 நவம்பர், 2021

எள்ளற் பொருளது இகழ்தல் - பாடல்.53 - வை.வேதரெத்தினம் உரை !

 

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை   வலியுறுத்துகிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (53)

-------------------------------

எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை

உள்ளற் பொருள துறுதிச்சொல்உள்ளறிந்து

சேர்தற் பொருள தறநெறி பன்னூலுந்

தேர்தற் பொருள பொருள்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

எள்ளல் பொருளது இகழ்தல், ஒருவனை

உள்ளல் பொருளது உறுதிச் சொல்உள் அறிந்து

சேர்தல் பொருளது அறநெறி, பல் நூலும்

தேர்தல் பொருள பொருள்.

 

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

ஒவ்வொரு மனிதனும் தன்னிடமிருந்து நீக்கவேண்டியது, பிறரை இகழ்வாகப் பேசுகின்ற  தீயசெயலை  !

 

ஒவ்வொரு மனிதனும் தயக்கமின்றி ஏற்க வேண்டியது, கற்றறிந்த சான்றோர்களின் நல்லுரையை !

 

ஒவ்வொரு மனிதனும்  உய்த்துணர்ந்து  கடைப்பிடித்து ஒழுக  வேண்டியது,  நலந்தரும் நல்வழியாம் அறவழியை !

 

அதுபோல், எத்தனை நூல்களைப் படித்தாலும் நாம் அறியவேண்டியது, அந்நூல்கள் நமக்குரைக்கும் மெய்ப்பொருளை !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

 

ஒருவனை = பிறனொருவனை ; இகழ்தல் = இகழும் செயல் ; எள்ளற் பொருளது = யாவராலும் நீக்குதற்குரியது ; உறுதிச் சொல் = ஒருவன் கூறும் உறுதிச் சொல்  ; உள்ளற் பொருளது = ஏற்றுக் கொள்ளற்குரியது ; அறநெறி = அறவழி ; உள் அறிந்து = ஒருவன் உள்ளத்தில் தெளிந்து ; சேர்தற் பொருளது = அடைதற்குரியது ; பொருள் = மெய்ப்பொருள்கள் ; பல் நூலும் = அமைவுடைய பல நூல்களையும் ; தேர்தற் பொருள் = ஆராய்ந்து தெளிதற்குரியன.

 

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

ஒருவனால் நீக்கப்பட வேண்டியது  பிறரை இகழும் செயல்; ஏற்கப் பட வேண்டியது பெரியோர்கள் கூறும் நல்லுரை; தெளிவாகக் கடைப்பிடிக்க வேண்டியது அறவழி ; அதுபோல், நூல்களைப் படித்து அறியப்பட வேண்டியது அந்நூல்கள் உரைக்கும் மெய்ப்பொருள்.

 

------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி (கார்த்திகை),14]

{30-11-2021}

------------------------------------------------------------------------------------------------