விரும்பும் பதிவைத் தேடுக !

பின்னவாம் பின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பின்னவாம் பின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 டிசம்பர், 2021

பின்னவாம் பின்னதிர்க்கும் - பாடல்.69 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (69)

---------------------------------

பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினைஎன் பெறினும்

முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கென்னும்

அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம்தவாவாம்

அவாவிலார் செய்யும் வினை.

 

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

பின்ன ஆம் பின் அதிர்க்கும் செய்வினைஎன் பெறினும்

முன்ன ஆம் முன்னம் அறிந்தார்கட்குஎன்னும்

அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம்தவா ஆம்

அவா இலார் செய்யும் வினை.

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

முன்னதாகவே  ஆராய்ந்து கணிக்காத  மனிதர்களுக்கு, ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்முன், அதனால் ஏற்படக்கூடிய  துன்பங்கள் பற்றி   அவை  தொடங்கிய  பின்பே தெரியவரும் !

 

முன்னதாகவே ஆராய்ந்து, கணித்து அச்செயலைத் தொடங்குபவர்களுக்கு, அதனால் ஏற்படக் கூடிய துன்பங்கள் பற்றி அவை உண்மையில் தொடங்குவதற்கு முன்னதாகவே தெரிந்திருக்கும் !

 

ஒரு பொருளின் மேல் அவாவுற்று அதை விரும்பி அடைந்தவர்கட்கு, அவர்கள் அறிவு எத்தனைத் தடுத்தாலும் சரி, அப்பொருள் மீது  மேலும் மேலும் பற்று (அவா) உண்டாகவே செய்யும் !

 

ஆனால், எந்தப் பொருள்கள் மீதும் பற்று வைக்காத அறிவார்ந்த பெரியோர்கள் செய்கின்ற  அறச் செயல்கள் ஒருபோதும் கெட்டுப்போகாமல் எப்பொழுதும் நிலைபெற்று நிற்கவே செய்யும் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

பின் = தொடங்கிய பின்பு ; அதிர்க்கும் = நடுங்கச் செய்யும் ; செய்வினை = செய்தொழில்கள் ; பின்ன ஆம் = முன் ஆராயாதார்க்கு பின் தோன்றுவனவாம் ; என் பெறினும் = எப் பயனைப் பெறுவதானாலும் ; முன்னம் = தொடங்குவதற்கு முன்னமேயே ; அறிந்தார்கட்கு = பின் வருவனவற்றை ஆராய்வார்க்கு ; முன்ன ஆம் = அவை முன் தோன்றுவனவாம் ; அடைந்தார்க்கு = ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்கட்கு ; உள்ளம் = அவர்கள் உள்ளம் ; என்னும் = எப்படியாயினும் ; அவா ஆம் = மேலும் மேலும் அவா உடையதாகும் ; அவா இலார் = எப்பொருளினும் பற்றில்லாத பெரியோர்கள் ; செய்யும் வினை = செய்யும் அறச் செயல்கள் ; தவா ஆம் = கெடாவாம்.

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் ஆராயாதவர்களுக்கு, அதன் துன்பங்கள் தொடங்கிய பின் தெரியும் ; ஆராய்கின்றவர்களுக்கு அவை தொடங்கும் முன்னமேயே தெரியும் ;ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்களுக்கு அதன்கண் எப்படியாயினும் பற்று உண்டாகும்; எப்பொருளினும் பற்றில்லாதவர்கள் செய்யும் செயல்கள் ஒருபோதும் கெடமாட்டா. 

 

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

"நான்மணிக்கடிகை” வலைப்பூ,.

[தி.:2052,நளி (கார்த்திகை),20]

{06-12-2021}

---------------------------------------------------------------------------------------------