விரும்பும் பதிவைத் தேடுக !

பெற்றான் அதிர்ப்பின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றான் அதிர்ப்பின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 நவம்பர், 2021

பெற்றான் அதிர்ப்பின் பிணையன்னாள் - பாடல்.21 - வை.வேதரெத்தினம் உரை !

நான்மணிக் கடிகை என்பது சங்க கால இலக்கியம். பதினெண் கீழ்க் கணக்கு வகையைச் சார்ந்த்து. கடவுள் வாழ்த்து உள்பட 106 செய்யுள்களை உடைய இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் ! இந்நூலிலிருந்து ஒரு செய்யுள் !

------------------------------------------------------------------------------------------------

பாடல். எண்.(21)

------------------------

 

பெற்றான்  அதிர்ப்பிற்  பிணையன்னாள்  தானதிர்க்கும்

கற்றான் அதிர்ப்பின்  பொருளதிர்க்கும்  -  பற்றிய

மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்

பாடல்  அதிர்ந்து விடும்.

 

-----------------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

 

கணவன் தன் ஒழுகலாற்றில் கலக்கம்  அடைவானாகில். அவன் மனைவியும் தன் கடமைகளைச் செய்வதில் கலக்கம் அடைவாள் !

 

கற்றறிந்த புலவன் தன் அறிவில் தெளிவுன்றிக், கருத்தில் கலக்கமுற்றால், அவன் கற்ற கல்வியும் கலக்கமுறும் !

 

குடிமக்கள் தம் நன்னெறி நீங்கி நிலை கலங்குவார்களானால் அரசனது ஆட்சியும் ஆட்டம் காணும் !

 

அதுபோல், யாழின் நரம்புக் கட்டுகள் தம் நிலை குலைந்தால், யாழிலிருந்து  பிறக்கும் இசையும் தெளிவின்றிக் கலக்கமுறும் !

 

-------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

---------------------------------

பெற்றான் = கணவன்; அதிர்ப்பின் = ஒழுக்கத்திற் கலங்குவானாயின்; பிணை அன்னாள் = பெண் மான் போலும் மருண்ட பார்வையுடைய  அவன் மனைவியும்; அதிர்க்கும் = தன் கடமையில் கலங்குவாள்; கற்றான் அதிர்ப்பின் = புலவன் அறிவு கலங்கினால்;  பொருள் அதிர்க்கும் = அவர் கற்ற கருத்துகளும் நிலை கலங்கும்;  பற்றிய = தான் கைப்பற்றிய ; மண் = நாட்டிலுள்ள குடிமக்கள் ; அதிர்ப்பின் = நிலை கலங்குவாரானால்;  மன்னவன் = அரசனது; கோல் அதிர்க்கும் = ஆட்சியும் கலங்கும்; பண் அதிர்ப்பின் = யாழின் நரம்புக் கட்டுகள் குலைந்துவிட்டால்; பாடல் அதிர்ந்துவிடும் = பிறக்கும் இசைப்பாடல்களும் கலங்கிப் போகும்.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------

கணவன் அறிவு கலங்கினால், மனைவியும் கலங்குவாள்; கற்றான் கலங்கினல் அருத்துகள் கலங்கும்; குடி நடுங்கினால், கோன் நடுங்குவன்; பண் அதிர்ந்தால், பாடல் அதிர்ந்துவிடும்.

 

-------------------------------------------------------------------------------------------------       

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}

-------------------------------------------------------------------------------------------------