விரும்பும் பதிவைத் தேடுக !

கற்றான் தளரின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்றான் தளரின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

கற்றான் தளரின் எழுந்திருக்கும் - பாடல்.75 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (75)

-------------------------------

கற்றான் தளரின் எழுந்திருக்குங் கல்லாத

பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்

ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்

பொய்யாவித் தாகி விடும்.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

கற்றான் தளரின் எழுந்திருக்கும்; கல்லாத

பேதையான் வீழ்வானேல் கால் முரியும்; எல்லாம்

ஒருமை தான் செய்த கருவி தெரிவு எண்ணின்

பொய்யா வித்து ஆகிவிடும்.

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

கல்வியறிவு பெற்றுத் தேர்ந்த ஒருவன் தன் முயற்சியில் தோல்வியடைந்து மனம் தளர்ச்சியுற்றால், அதிலிருந்து மீட்சி பெற அவனால் உறுதியாக முடியும் !

 

அறிவில்லாத முட்டாள் தன் முயற்சியில் தோல்வியடைந்து மனம் நொறுங்கி விட்டால், அதிலிருந்து மீட்சி பெற அவனால் முடியவே முடியாது !

 

ஒரு பிறவியில் மனிதன் செய்கின்ற நல்வினை தீவினை எல்லாம், மறுபிறவியில் அவனது இன்ப துன்பங்களுக்குக் காரணங்களாக அமையும் !

 

ஆராய்ந்து பார்த்தால், மனிதனாகப்  பிறந்திருப்பதன்  பயனை உணர்ந்து அறவழியில் வாழ்க்கையைச் செலுத்தினால், அதுவே வீடுபேற்றுக்குக்  காரணமாக அமையும் !

 

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

கற்றான் தளரின் = கல்வியறிவு உடையவன் ஒன்றில் இழுக்கல் உறுவானாயின் ; எழுந்திருக்கும் = அவன் எப்படியாயினும் உய்தி பெறுவான் ; கல்லாத பேதையான் = படிக்காத அறிவிலான் ; வீழ்வானேல் = இடையில் தளருவானாயின் ; கால் முரியும் = முயற்சி கெட்டு அழிவான் ; ஒருமை = ஒரு பிறப்பில் ; தான் செய்த எல்லாம் = தான் செய்தனவெல்லாம் ; கருவி = மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாம் ; எண்ணின் = ஆராயுமிடத்து ; தெரிவு = மெய்யுணர்வு ; பொய்யா வித்து ஆகிவிடும் = வீடு பேற்றுக்குத் தவறாத ஏதுவாகும்.

 

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------

கல்வியறிவு உடையவன் தளர்வானேல் எப்படியாயினும் உய்வான் ; கல்லாத பேதை தளர்வானேல் மீள உய்வறியாது வீழ்வான் ; எவர்க்கும் ஒரு பிறப்பின் செய்கைகள் மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாம் ; மெய் உணர்வு வீடுபேற்றுக்குத் தவறாத ஏதுவாகும்.

 

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),26]

{13-12-2021}

----------------------------------------------------------------------------------------------