விரும்பும் பதிவைத் தேடுக !

ஊழியும் யாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊழியும் யாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

ஊழியும் யாண்டெண்ணி யாத்தன - பாடல்.74 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (74)

---------------------------------

ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்

நாழிகை யானே நடந்தனதாழியாத்

தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்

வெஞ்சொலா லின்புறு வார்.

 

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன ; யாமமும்

நாழிகை யானே நடந்தனதாழியாத்

தெற்று என்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கு என்றார்

வெஞ் சொலால் இன்புறுவார்.

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

ஊழி என்று சொல்லப்படும் காலமுறைமை, நம் முன்னோர்களால்,  இத்தனை ஆண்டுகள் என்று எண்ணி,  வரையறுக்கப் பட்டிருக்கிறது !

 

யாமம் என்று சொல்லப்படும் வேளைமுறைமையும்   இத்தனை நாழிகைகள் என்று எண்ணி நம் முன்னோர்களால்  வரையறுக்கப் பட்டிருக்கிறது !

 

ஊழிகளாகவும் நாழிகையாகவும் காலம் விரைவாகக் கழிந்து போவதை உணரும் அறிவுடையோர்,  அறிஞர்களை அணுகிக்கற்று அறிவுத்தெளிவு அடைகின்றனர் !

 

ஆனால், அறிவில்லாதோர், காலம் விரைவாகக் கழிகிறது என்பதைக் கருதாமல் பிறர்  மீது  கடுஞ்சொற்களைச் சொல்லிச் சொல்லி  மகிழ்ந்து காலத்தைக் கழிக்கின்றனர் !

 

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

ஊழியும் = ஊழிக்காலமும் ; யாண்டு எண்ணி = ஆண்டுகளால் எண்ணி ; யாத்தன = அளவு செய்யப்பட்டன ; யாமமும் = யாமக் காலமும் ; நாழிகையானே = நாழிகைகளால் ; நடந்தன = அளவு செய்யப்பட்டுக் கழிந்தன ; தாழியா = காலந் தாழாமல் ; தெற்றென்றார் கண்ணே =  தெளிந்தவர் இடத்தில் ; தெளிந்தனர் = அறிவுடையார் எல்லாம் ஐயம் தெளிந்தனர் ; வெட்கென்றார் = அறிவிலாதார் ; வெம் சொலால் = பிறரைக் கொடுமை கூறும் வெவ்விய சொற்களாலேயே ; இன்புறுவர் = சொல்லிச் சொல்லி இன்புறுவார்கள்.

 

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

ஊழிகள் யாண்டுகளாற் கணக்கெண்ணி அளவு செய்யப்பட்டுக் கழிந்தன ; யாமமும் நாழிகையால் வரையறுக்கப்பட்டுக் கழிந்தன ; அறிஞர் தெளிந்தார் மாட்டுக் காலந் தாழாமல் ஐயந் தெளிந்தனர் ; அறியாதார் பிறரை வெஞ்சொற் கூறி மகிழ்ந்தனர்.

---------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),26]

{12-12-2021}

---------------------------------------------------------------------------------------------