விரும்பும் பதிவைத் தேடுக !

என்றும் உளவாகும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்றும் உளவாகும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 டிசம்பர், 2021

என்றும் உளவாகும் நாளும் - பாடல்.60 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (60)

--------------------------------

என்று முளவாகு நாளும் இருசுடரும்

என்றும் பிணியுந் தொழிலொக்கும்என்றும்

கொடுப்பாருங் கொள்வாரும் அன்னர் பிறப்பாருஞ்

சாவாரும் என்றும் உளர்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------

என்றும் உளவாகும் நாளும், இரு சுடரும்;

என்றும் பிணியும் தொழிலும் ஒக்கும்; - என்றும்

கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்

சாவாரும் என்றும் உளர்.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------

இந்தப் பேரண்டத்தில் விண்மீன்களும் திங்களும் கதிரவனும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றன  !

 

மனிதனின் செயல்களை முடக்கிப் போடும் நோயும், அவன் செய்யும் தொழில்களும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றன !

 

இல்லையென்று வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் ஈவோரும், அவற்றைப் பெறுவோரும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றனர் !

 

அதுபோல், இந்த உலகத்தில் புதிதாகப் பிறப்பவர்களும் இறப்பவர்களும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றனர் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

என்றும் = எக்காலத்தும் ; நாளும் = விண்மீன்களும் ; இருசுடரும் = திங்களும் சூரியனும் ; உளவாகும் = உள்ளனவாகும் ; என்றும் = எக்காலத்திலும் ; பிணியும் = செயலுக்கு இடையூறான நோயும் ; தொழில் = உழவு முதலிய தொழில்களும் ; ஒக்கும் = உள்ளன ஆகும் ; என்றும் = எக்காலத்திலும் ; கொடுப்பாரும் = இல்லை என்னாமல் ஈவாரும் ; கொள்வாரும் = ஏற்பாரும் ; அன்னர் = உளராவர் ; என்றும் = எக்காலத்திலும் ; பிறப்பாரும் = பிறப்பவர்களும் ; சாவாரும் = இறக்கின்றவர்களும் ; உளர் = உளராவார்.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

விண்மீன்களும் திங்களும் சூரியனும் என்றும் உள்ளன; நோயும் முயற்சியும் என்றும் உள்ளன; ஈவாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர் ; பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உளர் !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

-------------------------------------------------------------------------------------------------