விரும்பும் பதிவைத் தேடுக !

யானையுடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யானையுடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 நவம்பர், 2021

யானையுடையார் கதனுவப்பர் - பாடல்.56 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (56)

--------------------------------

யானை யுடையார் கதனுவப்பர், மன்னர்

கடும்பரிமாக் காதலித் தூர்வர்கொடுங்குழை

நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை

அல்லார் உவப்பது கேடு.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------

யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்

கடும் பரிமாக் காதலித்து ஊர்வர்கொடும் குழை

நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை

அல்லார் உவப்பது கேடு.

 

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

போர்க்களத்தில் சினமுற்றுத் தாக்கும் சிறந்த யானையே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதால், செங்களத்தில், யானைப்  படை வீரர்கள், அதனிடம் சீறும் சினத்தையே விரும்புவார்கள் !

 

மிகவிரைந்து ஓடுகின்ற மேன்மையான குதிரையில் ஏறிச்செல்வது வீரத்துக்கு அடையாளம் என்பதால் அரசர்கள், விரைந்தோடும் புரவியில்தான்  விரும்பி ஏறுவார்கள் !

 

மகரக் குழையணிந்த மங்கை என்றாலும்கூட, மங்கையரின்  மேனி அழகுக்கு மேலும் அழகூட்டும்  நாணம், அவளிடம் தவழ்வதையே நல்லியல்புடைய ஆடவர்கள் விரும்புவார்கள் !

 

ஆனால், நாணத்தைத்  துறந்துவிட்டு நடைபயிலும், நல்லியல்பு இல்லாப் பெண்டிரிடம்  நற்குணமில்லாத ஆடவர்கள் நல்லன  அல்லாதவற்றையே நயந்து விரும்புவார்கள் ! 

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

யானை உடையார் = யானையை உடைய போர்த் தலைவர் ; கதன் உவப்பர் = அதன் சினத்தை விரும்புவர் ; மன்னர் = அரசர் ; கடும் பரிமா = மிக விரைவாக  ஓடக்கூடிய  குதிரையை ; காதலித்து = விரும்பி ; ஊர்வர் = அதன் மேல் ஏறிச் செல்வர் ; கொடுங்குழை = வளைவான காதணியை அணிந்த ; நல்லாரை = மங்கையர்பால் ; நாண் = நாணத்தை ; நல்லவர் = நல்லியல்பு உடையவர்கள் ; உவப்பர் = விரும்புவார்கள் ; அல்லாரை = நாணுடையர் அல்லாத மகளிர்பால் ; அல்லார் = தீயோர் ; உவப்பது = விரும்புவது ; கேடு = தீய ஒழுக்கமேயாம்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------

யானையை உடையவர்கள் அதன் சினத்தை விரும்புவார்கள்; அரசர்கள் மிகவிரைவாக ஓடக் கூடிய குதிரையை விரும்புவார்கள். நல்லியல்பு உடைய ஆடவர்கள் நன் மங்கையரின் நாணத்தை விரும்புவார்கள்; தீய ஆடவர்கள் தீய பெண்டில்பால் தீதையே விரும்புவர்.

 

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி (கார்த்திகை),14]

{30-11-2021}

----------------------------------------------------------------------------------------------