விரும்பும் பதிவைத் தேடுக !

கந்திற் பிணிப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்திற் பிணிப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 நவம்பர், 2021

கந்திற் பிணிப்பர் களிற்றை - பாடல்.12 - வை.வேதரெத்தினம் உரை !

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை !  ஒவ்வொரு  செய்யுளிலும் நந்நான்கு கருத்துகளைச் சொல்வதால்  நான்கு மணிகளைக் கோத்த ஆரம் என்னும் பொருளில் நான்மணிக்   கடிகை என்று வழங்கப்படுகிறது !  இதிலிருந்து ஒரு  பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (12).

--------------------------------

 

கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர

மந்திரத்  தாற்பிணிப்பர் மாநாகம்  கொந்தி

இரும்பிற் பிணிப்பர்  கயத்தைச்சான்  றோரை

நயத்திற் பிணித்து விடல்.

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்.

----------------------------------------------------------------------------------------------

கந்திற் பிணிப்பர்  களிற்றை;  கதந்தவிர

மந்திரத்தாற் பிணிப்பர்  மாநாகம்  கொந்தி

இரும்பிற் பிணிப்பர் கயத்தை; சான்றோரை

நயத்திற் பிணித்து விடல்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

தூண் போன்ற பெரிய தறியில் தொடரி (சங்கிலி) கொண்டு பிணித்து யானையைத்  தன்வயப்  படுத்திவிடுவார்  பாகன் !

 

சீறுகின்ற நல்ல பாம்பினை அதன் சினம்  அடங்கும் வகையில்  மந்திரத்தால்  கட்டுப்படுத்தித் தன்வயப் படுத்திவிடுவார் மந்திரவாதி !

 

கயமைக் குணம் படைத்த கீழ்மக்களைக்  கோலினால் ஒறுத்து,  இரும்புத்  தளையிட்டு  அடக்கித்  தன்வயப்படுத்திடுவார்  நாடாளும்   மன்னர்  !

 

அதுபோல், சான்றோரை இன்சொல் முதலியவற்றால் தன்வயப்  படுத்திவிடுவர்  அறிவார்ந்த மேன்மக்கள் !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------------

களிற்றை = யானையை ; கந்தின் பிணிப்பர் = கட்டுத் தறியினால் வயப்படுத்துவர் (பாகர்) ; மா நாகம் = நல்ல பாம்பை ; கதம் தவிர = அதன் சீற்றம் தவிரும்படி ; மந்திரத்தால் பிணிப்பர் = மந்திரத்தினால் வயப்படுத்துவர் (மாந்திரீகர்) ; கயத்தை = கீழ்மகனை ; கொந்தி = உடம்பை ஒறுத்து; இரும்பின் பிணிப்பர் = விலங்கினால் வயப்படுத்துவர் (அரசர்) ; சான்றோரை = பெரியோரை ; நயத்தின் = இன்சொல் முதலிவற்றால் ; பிணித்து விடல் = வயப்படுத்தி விடுக (அறிவுடையோர்).

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------

யானையைத் தறியாலும், பாம்பை மந்திர மொழியாலும், கீழ்மக்களை விலங்காலும், மக்கள் வயப்படுத்துவர்; ஆனால், சான்றோரை இன்சொற்களால் வயப்படுத்த வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com}

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

-------------------------------------------------------------------------------------------------