விரும்பும் பதிவைத் தேடுக !

கள்வம் என்பார்க்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கள்வம் என்பார்க்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 நவம்பர், 2021

கள்வம் என்பார்க்கும் துயிலில்லை - பாடல்.09 - வை.வேதரெத்தினம் உரை !

 

முழுவதும் வெண்பாக்களால் மட்டுமே  யாக்கப் பெற்ற நான்மணிக்கடிகை,  விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பெற்ற நூல். கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளைச் சொல்கிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல்; எண் (09)

-----------------------------------

 

கள்வமென்  பார்க்குந்  துயிலில்லை  காதலிமாட்டு

உள்ளம்வைப்  பார்க்குந்  துயிலில்லை;  ஒண்பொருள்

செய்வமென்  பார்க்குந்  துயிலில்லை;  அப்பொருள்

காப்பார்க்கும்  இல்லை  துயில்.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

கள்வம்  என்பார்க்கும்  துயிலில்லை;  காதலிமாட்டு

உள்ளம்  வைப்பார்க்கும்  துயிலில்லை; ஒண்பொருள்

செய்வம்  என்பார்க்கும்  துயிலில்லை; அப்பொருள்

காப்பார்க்கும்  இல்லை துயில்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

 

திருடுவதற்காக ஊர் அரவம்  அடங்கும் வரைக் காத்திருப்பார்க்கும் உறக்கம் வாராது  !

 

காதலில் கட்டுண்டுக்  காதலியின் இடத்தில்  மனதைப் பறிகொடுத்தவர்களுக்கும் உறக்கம் வாராது !

 

நிறைந்த செல்வம் சேர்க்கவேண்டும் என்று கருதி இராப் பகலாய் உழைப்பவர்களுக்கும்  உறக்கம் வாராது !

 

அதுபோல்,  சேர்த்த பொருளை,  களவாலும் பிறவாற்றாலும் கெடாதபடிக் காப்பவர்களுக்கும் கவலையால் உறக்கம் வாராது !

----------------------------------------------------------------------------------------------

 

சொற்பொருள்:

-----------------------------------

 

கள்வம் என்பார்க்கும்  =  திருடுவம் என்று மக்கள் சோர்ந்திருக்கும் நேரம் பார்ப்பார்க்கும் ; காதலி மாட்டு = காதலியினிடத்தில் ; உள்ளம் வைப்பார்க்கும் = விருப்பம் வைத்திருப்பார்க்கும் ; ஒண்பொருள் = சிறந்த செல்வப் பொருளை ; செய்வம் என்பார்க்கும் = பெருக்குவம் என்று கருதி உழைப்பார்க்கும் ; அப்பொருள் = தேடிய அப்பொருளை ; காப்பார்க்கும் = களவாலும் பிறவாற்றாலும் கெடாதபடிப் பாதுகாப்பவர்கட்கும் ; துயில் இல்லை = உறக்கம் பிடிப்பதில்லை.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------


திருடர்க்கும், காதலியிடம் மனதைப் பறிகொடுத்த ஆடவர்க்கும், பொருள் தேடுவார்க்கும், அப்பொருளைப் பாதுகாப்பார்க்கும் இரவில் தூக்கம் வராது தவிப்பார்கள்.

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),01]

{17-11-2021}

-------------------------------------------------------------------------------------------------