விரும்பும் பதிவைத் தேடுக !

நாவன்றோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவன்றோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

நாவன்றோ நட்பறுக்குந் தேற்றமில் - பாடல்.81 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (81)

-----------------------------

நாவன்றோ நட்பறுக்குந் தேற்றமில் பேதை

விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்

படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ

மாறுள் நிறுக்குந் துணிபு.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

நா அன்றோ நட்பு அறுக்கும்; தேற்றம் இல் பேதை

விடும் அன்றோ வீங்கிப் பிணிப்பின்; அவா

படும் அன்றோ பல் நூல் வலையில்; கெடும் அன்றோ

மாறுள் நிறுக்கும் துணிபு.

 

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

சிந்திக்காமல் பதற்றத்தில் பேசுகின்ற  பேச்சு, இறுக்கமான நண்பர்களின் நட்பையே கெடுத்துவிடும் !

 

கட்டாயம் ஏற்பட்டால், தெளிவில்லாத அறிவிலிகள், தமது  நற்செய்கைகளைக்கூடக் கைவிட்டு விடுவர் !

 

அறிவு நூல்கள் பலவற்றையும் படிப்பதால், மாணாக்கர்களிடம் குடிகொண்டிருக்கும் தீய அவா மடிந்துபோகும் !

 

பகைமையை அறிவற்ற  துணிவுடன் எதிர்கொள்ள முனைபவன், இறுதியில் அழிந்தே போவான் !

 

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

 

நா = பதறிப் பேசும் நாக்கு ; நட்பு அறுக்குமன்றோ = நேசத்தைக் கெடுக்குமன்றோ ; வீங்கிப் பிணிப்பின் = வற்புறுத்துக் கட்டாயப்படுத்தினால் ; தேற்றம் இல் பேதை = தெளிவில்லாத அறிவிலி ; விடுமன்றோ = நற்செய்கைகளையும் கைவிடுமன்றோ ; பல நூல் வலையின் = பல அறிவு நூல்கள் என்னும் வலையால் ; அவா = அதன்கண் அகப்பட்ட நன்மாணாக்கரது தீய அவா ; படுமன்றோ = கெட்டு ஒழியுமன்றோ ; மாறுள் = பகைமைக்கண் ; நிறுக்கும் துணிபு = ஒருவன் வைக்கும் துணிவு எண்ணத்தால் ; கெடுமன்றோ = அவன் விரைவில் கெட்டுவிடுவான் அல்லனோ ?

--------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------

பதறிய நாக்கினால் நட்புக் கெடும் ; கட்டாயப்படுத்தினால் தெளிவில்லாத பேதை மக்கள் நற்செய்கைகளைக் கைவிடுவர் ; நூல்களைப் பயில்வதால் மாணாக்கர்க்கு அவாக் கெடும் ; பகைமைக்கண் துணிவு நிறுத்துதல், அங்ஙனம் நிறுத்துவானுக்கே கேடாம்.

 

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

---------------------------------------------------------------------------------------------