விரும்பும் பதிவைத் தேடுக !

இன்னாமை வேண்டின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்னாமை வேண்டின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 நவம்பர், 2021

இன்னாமை வேண்டின் இரவெழுக - பாடல்.17 - வை.வேதரெத்தினம் உரை !

 

நாகனார் என்னும் பெரும்புலவர் விளம்பி என்னு ஊரைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் விளம்பி நாகனார் என அவர் அழைக்கப்படுகிறார் ! இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய  நான்மணிக்கடிகை என்னும் நூல் பல அரிய கருத்துகளை நமக்கு எடுத்துரைக்கிறது !  அதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (17)

------------------------------

 

இன்னாமை வேண்டின் இரவெழுக; இந்நிலத்து

மன்னுதல் வேண்டின்  இசைநடுக; - தன்னோடு

செல்வது வேண்டின்  அறஞ்செய்க;  வெல்வது

வேண்டின்  வெகுளி விடல்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

 

இழிவானவன் என்னும்  பெயரைத்  தேடிக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ அவன் தன்னிடம் போதுமான செல்வம் இருந்தும் கூட பேராசை மீக்கூரப்  பிச்சை எடுக்கும் தொழிலை  மேற்கொள்ளலாம் !

 

இந்த உலகத்தில் என்றென்றும்  நிலைபெற்று  விளங்குதலை எவனொருவன் விரும்புகிறானோ, அவன் புகழ் விளைக்கும்  செயல்களை மேற்கொள்ளலாம் !

 

தான் செல்லுமிடமெல்லாம் தனக்குத் துணையாக ஒரு பாதுகாப்புக் கவசம்  தேவை  என்று எவனொருவன் விரும்புகிறானோ, அவன் அறச் செயல்களில்  ஈடுபடுவதை மேற்கொள்ளலாம் !

 

அதுபோல், பிறரை வெற்றி கொண்டு தன்பால் ஈர்த்துக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ, அவன் சினம் (கோபம்) கொள்வதை  முற்றிலுமாக விட்டுவிடல் வேண்டும் !

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------------

இன்னாமை வேண்டின் = இழிவை ஒருவன் விரும்பினால்  ;  இரவு எழுக  =  இரந்து (பிச்சை எடுத்து) உண்பதை மேற்கொள்க  ;  இந்நிலத்து = இவ்வுலகில் ; மன்னுதல் வேண்டின்  =  நிலையான பெயர் பெற்று விளங்க விரும்பினால்  ;  இசை நடுக  =  புகழ் தரும் செயல்களில் ஈடுபடுக  ;  தன்னோடு செல்வது வேண்டின்  =  தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால்  ;   அறம் செய்க  =  அறச் செயல்களை மேற்கொள்க  ;   வெல்வது வேண்டின்  =  பிறரை வெல்ல விரும்பினால்  ;  வெகுளி விடல்  =  சினம்  (கோபம் ) கொள்வதை விட்டுவிடுக.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

இழிவை விரும்பினால் இரந்துண்க ;  அழியாமை வேண்டினால் புகழ் தரும் செயல்களைப் புரிக ; உறுதுணையை வேண்டினால் அறம் செக ; வெல்லல் விரும்பினால் வெகுளியைக் கைவிடுக !


---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

----------------------------------------------------------------------------------------------