விரும்பும் பதிவைத் தேடுக !

பட்டாங்கே பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டாங்கே பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

பட்டாங்கே பட்டொழுகும் - பாடல்.92 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (92)

------------------------------

பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்

பெட்டாங் கொழுகும் பிணையிலிமுட்டினுஞ்

சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினுங்

கொன்றான்மேல் நிற்குங் கொலை.

 

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------

பட்டாங்கே பட்டு ஒழுகும் பண்பு உடையாள்; காப்பினும்

பெட்டு ஆங்கு ஒழுகும் பிணை இலி; – முட்டினும்

சென்றாங்கே சென்று ஒழுகும் காமம்; கரப்பினும்

கொன்றான் மேல் நிற்கும் கொலை.

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

 

நல்லியல்புடைய பெண் பெற்றோர்களின் கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாவிடினும், (கற்பு நெறி என்னும்) மனவறுதி தளர்ந்து பிற ஆடவனைக் காதலிக்கத் துணிய  மாட்டாள் !

 

நற்பண்பில்லாத பெண் பெற்றோர்கள் எத்தனைக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், (கற்பு நெறி என்னும்) மனவறுதி குலைந்து பிற ஆடவனைக் காதலிக்க அஞ்சமாட்டாள் !

 

காமவயப்பட்ட ஒருவன், எத்தனை இடையூறுகள் நேர்ந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், முன்பு நிகழ்த்திய அதே காமச் செயல்களில்  மீண்டும் மீண்டும் ஈடுபடுவான் !

 

எத்துணை நுட்பமாகத் திட்டமிட்டுத் தடயங்கள் எதையும் விட்டுச் செல்லாமல்   செய்திருந்தாலும் கூட, கொலையைச்  செய்தவன் மேல் அப்பழி ஒருநாள் வீழ்ந்தே தீரும் ! 

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

 

பண்பு உடையாள் = நல்லியல்பு உடைய பெண் ; பட்டாங்கே = கற்புண்மைப்படியே ; பட்டு = ஒத்து ; ஒழுகும் = ஒழுகுவாள் ; பிணை இலி = மனம் பொருந்துதல் இல்லாதவள் ; காப்பினும் = கணவன் காவல் செய்யினும் ; பெட்டாங்கு = தான் விரும்பியபடியே ; ஒழுகும் = பிறரோடு மருவி ஒழுகுவாள் ; காமம் = காமவியல்பு ; முட்டினும் = இடையூறு உண்டாயினும் ; சென்றாங்கே = முன்பு சென்றபடியே ; சென்று ஒழுகும் = பின்பும் சென்று நிகழும் ; கொலை = கொலைப்பழி ; கரப்பினும் = எவ்வளவு மறைத்தாலும் ; கொன்றான்மேல் = கொலை செய்தவன் மேலேயே ; நிற்கும் = நிலைபெறும்.

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

நல்ல பெண் காவலில்லாவிடினும் கற்பொழுக்கத்தையே மேற்கொண்டு ஒழுகுவாள் ; நற்பண்பில்லாதவள் எத்தனை காவல் செய்யினும் தான் விரும்பிய வாறே பிறரைக் காதலித்தொழுகுவாள் ; காமவியல்பு எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் முன் நிகாழ்ந்தபடியே நிகழும் ; கொலைப்பழி எவ்வளவு மறைப்பினும் கொன்றான் மேலேயே வெளிப்படும்.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக் கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-----------------------------------------------------------------------------------------------