விரும்பும் பதிவைத் தேடுக !

கைத்தில்லார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைத்தில்லார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 டிசம்பர், 2021

கைத்தில்லார் நல்லவர் - பாடல்.70 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (70)

-------------------------------

கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்

வைத்தாரின் நல்லர் வறியவர்பைத்தெழுந்து

வைதாரின் நல்லர் பொறுப்பவர்செய்தாரின்

நல்லர் சிதையா தவர்.

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

கைத்து இல்லார் நல்லவர் கைத்து உண்டாய் காப்பாரின்;

வைத்தாரின் நல்லர் வறியவர்; – பைத்து எழுந்து

வைதாரின் நல்லர் பொறுப்பவர்; – செய்தாரின்

நல்லர் சிதையாதவர்.

 

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

ஒருவரிடம் நிறைய செல்வம் இருக்கிறது; ஆனால் அதில் துளியளவு கூட எடுத்து தனக்குப் பயன்படுத்த மனம் இல்லை. அவரை விட, செல்வமே இல்லாதவர்கள் எவ்வளவோ மேல் !

 

கோடி கோடியாய்ச் செல்வத்தைச் சேர்த்து வைத்து, அதைப் பாதுக்காக்கத் தெரியாமல் ஏமாற்றுக்காரர்களிடம் கொடுத்து வைத்து ஏமாறுபவர்களை விட, செல்வமே இல்லா வறியவர்கள் எவ்வளவோ மேல் !

 

தேவையில்லாமல் வெகுண்டெழுந்து வரைமுறையில்லாமல் பிறரை வைபவர்களை விட, அத்தகைய வைதலுரையைப் பொறுத்துக்கொண்டு அமைதி காப்போர் எவ்வளவோ மேல் !

 

அதுபோல், பிறருக்கு நன்மை செய்வதையே குறிக்கோளாக ஏற்று  வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒழுகிவரும் மனிதர்களை விட செய்ந்நன்றியை மறவாமல் இருப்பவர்களே மிகவும் மேல் !

 

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

கைத்து உண்டாய் = செல்வம் உள்ளவராய் ; காப்பாரின் = அச்செல்வத்தை நுகராமல் சேர்த்துப் பாதுகாப்பவரைவிட ; கைத்து இல்லார் = அச்செல்வம் இல்லாத மாந்தர் ; நல்லவர் = மிகவும் நல்லவரேயாவார் ; வைத்தாரின் = அப்பொருளை வைத்து இழப்பாரைவிட ; வறியவர் நல்லர் = வறுமையுடையோர் நல்லவராவார் ; பைத்து எழுந்துசினந்து எழுந்து ; வைதாரின் = பிறரை வைதவர்களை விட ; பொறுப்பவர் = அவ் வைதலுரையைப் பொறுப்பவர்கள் ; நல்லர் =  மிகவும் நல்லவராவார் ; செய்தாரின் = நன்மை செய்தவர்களை விட ; சிதையாதவர் = அந் நன்மையை மறவாதவர்கள் ; நல்லர் = மிகவும் நல்லவராவார்.

 

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

செல்வமிருந்தும் பயன் அடையாதவர்களை விட, அச் செல்வம் இல்லாதவர்கள் நல்லவர்கள் ; செல்வத்தைச் சேர்த்து வைத்து இழப்பாரினும் வறியவர் மிக நல்லவர் ; சினந்தெழுந்து வைதாரினும் அதனைப் பொறுப்பவர்கள் மிகவும் நல்லவர் ; ஒரு நன்மை செய்தாரினும் அச் செய்நன்றியை மறவாதவர் மிக நல்லவர்.

 

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),20]

{06-12-2021}

---------------------------------------------------------------------------------------------