விரும்பும் பதிவைத் தேடுக !

வாலிழையார் முன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாலிழையார் முன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2021

வாலிழையார் முன்னர் - பாடல்.99 - வை.வேதரெத்தினம் உரை.

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (99)

------------------------------

வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்

சாலும் அவைப்படிற் கல்லாதான் பாடிலன்

கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்

பேதையார் முன்னர்ப் படின்.


---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

வால் இழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலர்;

சாலும் அவைப்படின் கல்லாதான் பாடு இலன்;

கற்றான் ஒருவனும் பாடு இலனே; கல்லாதார்

பேதையார் முன்னர்ப் படின்.


----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

அழகுநிறை பெண்களுக்கு முன்பாகத் தோன்றும் அழகில்லா ஆடவன்பெருமையுடன் பேசப்படுதல்  இல்லை !

 

கற்றறிந்த அறிஞர்கள் அவையின் முன் தோன்றும் கல்லாத மனிதனும், பெருமையாகப் பேசப்படுதல் இல்லை !

 

கல்லாத மாந்தர்கள் முன் தோன்றும் கற்றறிந்த ஆன்றோரும், பெருமையாகப் பேசப்படுதல் இல்லை !

 

அறிவில்லாத பேதையர் முன்பாகத் தோன்றும் அறிஞனும் பெருமையாகப் பேசப்படுதல் இல்லை !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

வால் இழையார் முன்னர் = ஒள்ளிய அணிகலன்களை அணிந்த அழகிய பெண்மக்களுக்கு முன் ; வனப்பு இல்லார் = அழகில்லாத ஆடவர் ; பாடு இலர் = பெருமை இலர் ; சாலும் = கல்வி கேள்விகளால் நிறைந்த ; அவைப்படின் = அவையில் புகுந்தால் ; கல்லாதான் = கல்வியறிவு இல்லதவன் ; பாடு இலன்பெருமை இல்லாதவன் ஆவான் ; கற்றான் ஒருவனும் = கற்றறிவு உடையான் ஒருவனும் ; கல்லாதார் (முன்னர்ப் படின்) = படியாதவரிடம் சேர்ந்தால் ; பாடு இலனே = பெருமை இலனாவன் ; பேதையார் முன்னர்ப் படின் = அறிவிலார்பாற் சேரினும் ; பாடு இலனே = அறிஞன் பெருமை இலனேயாவன்.

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

அழகிய பெண்டிர்க்கு முன்னர் அழகில்லாத ஆடவர் பெருமை அடைதல் இல்லை ; கற்றார் அவையில் கல்லாதான் பெருமை அடைதல் இல்லை ; கல்லாதார் முன்பு கற்றானும் பெருமை அடைதல் இல்லை ; அறிவிலார் முன்பும் அறிஞர் பெருமை அடைதல் இல்லை.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

----------------------------------------------------------------------------------------------