விரும்பும் பதிவைத் தேடுக !

பெருக்குக நட்டாரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருக்குக நட்டாரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

பெருக்குக நட்டாரை - பாடல்.89 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (89)

------------------------------

 

பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்

தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு

அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக

செல்லா இடத்துச் சினம்.

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

 

பெருக்குக நாட்டாரை நன்றின் பால் உய்த்து;

தருக்குக ஒட்டாரைக் காலம் அறிந்து; ஆங்கு

அருக்குக யார்மாட்டும் உண்டி; சுருக்குக

செல்லா இடத்துச் சினம்,

 

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

 

நண்பருக்கு  நன்மை செய்யும் நேரம் எப்போது வாய்க்கும் என்று எதிர்பார்த்திருப்பதே நட்பின் இலக்கணம். ஆதலால் உனக்கு வாய்ப்புக் கிடைக்கையில் உன் நண்பருக்குத் தக்க உதவிகள் செய்து அவரை  வாழ்வில் உயர்த்துவாயாக !

 

நேரம் காலம் தெரியாமல் பகைவனுடன் மோதுவது உன்  வீட்சிக்கு வழி வகுத்துவிடும். பகைவனை வெல்ல வேண்டுமானால் உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்குபோலக் காத்திரு. வாய்ப்பான நேரமறிந்து வீரத்தால் அவனை வெல்வாயாக !

 

நெருங்கிய உறவினர் வீடாயினும் சரி, நண்பர் வீடாயினும் சரிஅடிக்கடி அவர்கள் வீட்டிற்குச் சென்று உணவு அருந்துதல் மிகவும் இழிவான செயல். உன் மீது அவர்களுக்கு வெறுப்பை வளர்க்கும். இந்த இழி செயலை விட்டுவிடுவாயாக !

 

சினம் கொள்ளுதல் எந்தவொரு மனிதனையும்  சமயத்தில்  சிக்கலில் ஆழ்த்திவிடும். அதுவும் உன்னைவிட வலிமையானவனிடம் சினம் கொள்வது உனக்கே இடராக முடியும்; சீரழிவைத் தரும் சினத்தை விட்டுவிடுவாயாக !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

 

நட்டாரை = ஒருவன் தனக்கு நண்பர் ஆனவரை ; நன்றின்பால் உய்த்து = நன்மையிற் செலுத்தி ; பெருக்குக = நல்வாழ்வில் உயர்த்துக ; ஒட்டாரை = பகைவர்களை ; காலம் அறிந்து = உரிய காலம் தெரிந்து ; தருக்குக = மறங்கொண்டு வெல்க ; யார்மாட்டும் = யாவரகத்தும் ; உண்டி = அடுத்துண்ணுதலை ; அருக்குக = சுருக்கிக்  கொள்க ; செல்லாவிடத்து = செல்லும் தகுதி இல்லாவிடத்து ; சினம் சுருக்குக = சினத்தைத் தணித்துக் கொள்க

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

 

நண்பரை நல்வாழ்வில் உயர்த்துக ; பகைவரைக் காலமறிந்து வெல்க ; யாவர் அகத்தும் அடுத்து உண்ணுதலைக் குறைத்துக் கொள்க ; செல்லத் தகாத இடத்தில் சினத்தைத் தணித்துக் கொள்க.

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-----------------------------------------------------------------------------------------------