விரும்பும் பதிவைத் தேடுக !

இன்சொலான் ஆகும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்சொலான் ஆகும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2021

இன்சொலான் ஆகுங் கிழமை - பாடல்.106 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (106)

--------------------------------

இன்சொலான் ஆகுங் கிழமை இனிப்பிலா

வன்சொலான் ஆகும் வசைமனம்மென்சொலின்

நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்

வீவிலா வீடாய் விடும்.


----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

இன்சொலால் ஆகும் கிழமை; இனிப்பு இலா

வன்சொலால் ஆகும் வசை மனம்; மென் சொலின்

நாவினால் ஆகும் அருள் மனம்; அம்மனத்தால்

வீவு இலா வீடு ஆய்விடும்.


----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

இன்சொல் பேசும் மாந்தரைச் சுற்றி, இனிமை நிலவும், நட்பும் வளரும் !

 

வன்சொல்  பயிலும்நெஞ்சினில் என்றும் வஞ்சக எண்ணம் வளரும், பெருகும் !

 

நயமிகு சொற்கள் நாவில் தவழ்ந்தால் அருளும் பரிவும் முகிழ்த்திடச் செய்யும்  !

 

அருள்மனம் பிறவிப் பயனைத் துய்த்திட, அகல்வழி காட்டும், உண்மை உணர்வீர் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

இன் சொலான் = இன்சொல்லால் ; கிழமை ஆகும் = ஒருவற்கு நட்புரிமை உண்டாகும் ; இனிப்பு இலா = இன்பமில்லாத ; வன்சொலான் = வன்சொல்லினால் ; வசை மனம் ஆகும் = கெட்ட கருத்து உண்டாகும் ; மென் சொலின் = நயமான சொல்லையுடைய ; நாவினால் = நாக்கினால் ; அருள் மனம் ஆகும் = இரக்க எண்ணம் உண்டாகும் ; அம் மனத்தான் = அவ்வருள் நெஞ்சத்தால் ; வீவு இலா = அழிவு இல்லாத ; வீடு ஆய்விடும் = வீடுபேறு உண்டாகும்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

இன்சொல்லால் நட்புரிமை உண்டாகும் ; வன் சொல்லால் கெடு நினைவு உண்டாகும் ; நயமான சொற்களால் அருள் நெஞ்சம் உண்டாகும் ; அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடு பேறு உண்டாகும்.


---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

----------------------------------------------------------------------------------------------