விரும்பும் பதிவைத் தேடுக !

ஒருவனறிவானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒருவனறிவானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2021

ஒருவ னறிவானும் எல்லாம் - பாடல்.104 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (104)

---------------------------------

ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்

ஒருவ னறியா தவனும் ஒருவன்

குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்

கணன் அடங்கக் கற்றானும் இல்.

 

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

ஒருவன் அறிவானும் எல்லாம்; யாதொன்றும்

ஒருவன் அறியாதவனும்; ஒருவன்

குணன் அடங்கக் குற்றம் உளானும்; ஒருவன்

கணன் அடங்கக் கற்றானும் இல்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

 

எல்லாம் அறிந்தவன் என்று  உலகில் எவனுமே இல்லை !

 

ஒன்றுமே அறியாதவன் என்று உலகில் ஒருவனுமே இல்லை !

 

குற்றங் குறைகள் மட்டுமே உள்ளவனாக ஒருவனும் இல்லை !

 

அறியாமை  இல்லாத  அறிவாளியாக  எவனுமே இல்லை !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

எல்லாம் = எல்லாக் கலைகளையும் ; அறிவான் ஒருவனும் இல் = தெரிந்தவன் ஒருவனும் இல்லை ; யாதொன்றும் = ஒரு சிறிதும் ; அறியாதவன் ஒருவனும் இல் = தெரியாதவன் ஒருவனும் இல்லை ; குணன் அடங்க = ஒரு நல்லியல்பும் இலதாக ; குற்றம் உள்ளான் ஒருவனும் இல் = பிழையே உள்ளவன் ஒருவனும் இல்லை ; கணன் அடங்க = அறியாமை சிறிதும் இலதாக ; கற்றானும் இல் = கற்றறிந்தவனும் இல்லை.

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

எல்லாம் அறிந்தவனும் இல்லை ; ஒன்றும் அறியாதவனும் இல்லை ; குற்றமே உள்ளவனும் இல்லை ; அறியாமை இல்லாதவனும் இல்லை.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

-----------------------------------------------------------------------------------------------