விரும்பும் பதிவைத் தேடுக !

கற்பக் கழிமடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பக் கழிமடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 நவம்பர், 2021

கற்பக் கழிமடம் அஃகும் - பாடல்.30 - வை.வேதரெத்தினம் உரை !

சங்க கால இலக்கியமான நான்மணிக்கடிகை  முழுவதும் வெண்பாக்களால் ஆனது. ஒன்னொரு பாடலிலும்  நந்நான்கு  கருத்துகள் சொல்லப்படுகின்றன !  மதி மன்னு மாயவன்  வாள்முகம் ஒக்கும்என்னும்  கடவுள் வாழ்த்துப் பாடலின் மூலம் இந்நூலாசிரியர் திருமால் வழிபாட்டினர் என்பது புலனாகிறது! இதிலிருந்து ஒருபாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (30)

---------------------

 

கற்பக்    கழிமடம்    அஃகும்  மடம்அஃகப்

புற்கந்தீர்ந்  திவ்வுலகின்  கோளுணருங்  கோளுணர்ந்தால்

தத்துவ  மான  நெறிபடரும்  அந்நெறி

இப்பா  லுலகின்  இசைநிறீஇ  -  உப்பால்

உயர்ந்த உலகம் புகும்.

 

(ஐந்து அடிகள் கொண்ட வெண்பாவாதலால், இதைப்   பஃறொடை  வெண்பா என்பர்)

------------------------------------------------------------------------------------------------

பொருள்:

------------

 

அறிவார்ந்த  நூல்களைக்  கற்கக்  கற்க, மனிதனிடம் குடிகொண்டுள்ள  அறியாமை  மெல்லெ மெல்லக் குறைகிறது !

 

அறியாமை  குறையக்  குறைய  அவனிடம்  நிறைந்திருக்கும் புல்லறிவு (முட்டாள்தனம்) நீங்கி  , இவ்வுலகத்தைப்  புரிந்து  கொள்கிறான் !

 

உலக இயல்பைப் புரிந்து கொண்ட பின் , உண்மையான அருள் நெறியில்  நடைபயிலத்  தொடங்குகிறான் !

 

அருள்நெறியில் ஒழுகத் தொடங்குவதால் , இம்மையில் புகழை ஈட்டுவதுடன்,  மறுமையில் வீடுபேறும் எய்துகிறான் !

----------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

கற்ப = ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதனால் ; கழிமடம் = மிக்க அறியாமை ; அஃகும் = குறையப் பெறுவான் ; மடம் அஃக = அறியாமை குறைய ; புற்கம் தீர்ந்து = புல்லறிவு நீங்கி ; இவ்வுலகின் = இவ்வுலகத்தின் ; கோள் உணரும் = இயற்கையைப்  புரிந்து கொள்வான் ;  (கோள் = இயல்பு, இயற்கை) கோள் உணர்ந்தால் = அவ்வியற்கையை அறிந்து கொண்டால் ; தத்துவமான = உண்மையான ; நெறி படரும் = அருள் நெறியில் செல்வான் ; அந் நெறி = அந் நெறியினால் ; இப்பால் உலகின் = இவ்வுலகின்கண் ; இசைநிறீஇ = புகழ் நிறுத்தி ; உப்பால் = மறுமையில் ; உயர்ந்த உலகம் புகும் = உயர்ந்த வீடு பேறு அடைவான்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

ஒருவன் அறிவு நூல்களைக் கற்றால் அறியாமை  குறையப் பெறுவான் ;  அறியாமை குறையப் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான் ; அறிய ,மெய்ந்நெறியாகிய நன்னெறியில் செல்வான் ; செல்ல, இவ்வுலகத்திற் புகழை நிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான் !

 

 

 

------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:-

 ------------------

இப்பாடல் நான்மணிக் கடிகைக்கு உரிய  பாடலாகத் தெரியவில்லை; இடைச்செருகல் போல் தோன்றுகிறது.  தத்துவம்என்ற தமிழல்லாச் சொல் இடம்பெற்றிருப்பதும்,  இம்மை, மறுமை போன்ற கருத்துகள் புகுத்தப் பெற்றிருப்பதும் இடைச்செருகல் என்பதை  உணர்த்துகிறது !

 

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}

------------------------------------------------------------------------------------------------