விரும்பும் பதிவைத் தேடுக !

ஆசாரம் என்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசாரம் என்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2021

ஆசாரம் என்பது கல்வி - பாடல்.96 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (96)

------------------------------

ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து

போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணுங்

கண்ணோட்ட மின்மை முறைமை தெரிந்தாள்வான்

உண்ணாட்டம் இன்மையு மில்

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------

ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்து

போகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும்

கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்தாள்வான்

உள் நாட்டம் இன்மையும் இல்.


-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

ஒரு மனிதனிடம் இயல்பாகவே உருவாகும் நல்லொழுக்கம் என்பது அவனது கல்வியறிவால் அவனிடம் ஏற்படும் நற்பயனின் விளைவாகும் !

 

அறம் செய்தலும் இன்பம் நுகர்தலும் இணைந்து இயங்குகின்றன என்றால், அது ஒரு மனிதன் தன் செல்வத்தை முறையாகக்  கையாளுதலால் ஏற்படும் பயனாகும் !

 

ஒருதலைச் சார்பாக யார்மீதும் பரிவு கொள்ளாது, ஒரு மன்னன் தன் கடமைகளைச் செய்வானாயின் அதுவே  நடுவுநிலையோடு அரசாட்சி செய்கின்ற முறைமையாகும் !

 

ஒரு கருத்தைப் பற்றி அமைச்சர்களுடன் கலந்துரையாடி ஆராய்வது மட்டுமன்றி தன் உள்ளத்தேயும் தனியாக ஆராய்வோனே சிறந்த அரசனுக்குரிய இயல்பினன் ஆவான் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

ஆசாரம் என்பது = நல்லொழுக்கம் என்பது ; கல்வி = கல்வியறிவின் பயனாகும் ; அறம் சேர்ந்த = அறவினைகளோடு சேர்ந்த ; போகம் உடைமை = இன்ப நுகர்ச்சி ; பொருள் ஆட்சி = செல்வத்தைக் கையாளுதலின் பயனாகும் ; யார் கண்ணும் = யாரிடத்திலும் ; கண்ணோட்டமின்மை = கண்ணோட்டமில்லாமை ; முறைமை = நடுநிலையாக ஆளுமுறைமையாம் ; தெரிந்து ஆள்வான் = பிறரோடு ஆராய்ந்து  அரசாளுபவன் ; உள் நாட்டம் இன்மையும் = தன்னுள்ளத்தில் ஆராயாமையும் ; இல் = இல்லை.


-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

நல்லொழுக்கம் என்பது கல்வியின் பயன் ; அறஞ்செய்தலோடு இன்பத்தை நுகர்தல் என்பது செல்வத்தை முறையாக ஆளுதலின் பயன் ; யாரிடத்திலும் கண்ணோட்டம் இல்லாமை நடுவுநிலையோடு அரசாளும் முறையாம் ; தான் உளத்தேயும் தனியாக ஆராய்வோன் தெரிந்து அரசாளும் இயல்பினன்.


-----------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: ஆசாரம் என்பது தமிழ்சொல் அன்று. ஓலைச் சுவடியிலிருந்து எடுத்து எழுதுகையில் நிகழ்ந்த இடைச்செருகலாக இருக்கக் கூடும் !

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

-----------------------------------------------------------------------------------------------