விரும்பும் பதிவைத் தேடுக !

நிலத்துக்கு அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலத்துக்கு அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 நவம்பர், 2021

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் - பாடல்.11 - வை.வேதரெத்தினம் உரை !

 

கடைச்சங்க காலமான கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியம் நான்மணிக் கடிகை என்னும் நூல். கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்டிருக்கும் இந்நூலில்  அனைத்துப் பாடல்களுமே வெண்பாக்களால் ஆனவை ! விளம்பி என்னும் ஊரைச் சேர்ந்த நாகனார் என்னும் புலவர் படைத்துள்ள இந்நூலில் இருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல்:  (11).

-----------------------

 

நிலத்துக்  கணியென்ப  நெல்லுங்  கரும்பும்;

குளத்துக்  கணியென்ப  தாமரை; பெண்மை

நலத்துக்  கணியென்ப  நாணந்  தனக்கணியாம்

தான்செல்  உலகத் தறம்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்;

-----------------------------------------------------------------------------------------------

 

நிலத்துக்கு  அணியென்ப  நெல்லும்  கரும்பும்;

குளத்துக்கு  அணியென்ப  தாமரை;  பெண்மை

நலத்துக்கு அணியென்ப  நாணம், தனக்கு அணியாம்

தான்செல்  உலகத்து அறம்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

 

பச்சைப் பசேலென்று காணப்படும்  நெற்பயிரும், கரும்பின் பயிரும் வயலுக்கு அழகென்று உலகத்தார் சொல்வார்கள் !

 

தாமரைக் கொடியும் இலையும் மலரும்  நிறைந்து இருக்கும் கண் கொள்ளாக் காட்சியே குளத்திற்கு  அழகு என்றும் உலகத்தார்  சொல்வார்கள் !

 

பெண்மையே அழகுதான்; எனினும் பெண்களிடம் காணப்படும் நாணம் தான் உயர்வான அழகு என்றும் உலகத்தார்  சொல்வார்கள் !

 

அதுபோல், மனிதன் செய்கின்ற அறச் செயல்கள் தான்  அவன்  எங்கு சென்றாலும் அவனுக்கு மதிப்பு மிக்க அழகைத் தருகிறது  என்றும் உலகத்தார் சொல்வார்கள் !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------------

நெல்லும் கரும்பும் = நெற்பயிரும் கரும்புப் பயிரும் ; நிலத்துக்கு அணி என்ப = வயலுக்கு அழகு என்று சொல்லுவர் ; தாமரை = செந்தாமரைக் காடுகள் ; குளத்துக்கு அணி என்ப = குளங்ளுக்கு அழகு என்று சொல்லுவர் ; நாணம் = நாணப்படும் இயல்பு ; பெண்மை நலத்துக்கு = பெண் (தன்மைக்குரிய) கற்பாகிய ஒழுக்கத்துக்கு ; அணி என்ப = அழகு என்று சொல்லுவர் ; தான் செல் உலகத்து அறம் = தான் செல்கின்ற பிற ஊர்களுக்கு எல்லாம் துணையாகச் செய்யப்படும் அறச்  செயல்கள் ; தனக்கு அணியாம் = ஒருவனுக்கு அழகாகும்.;

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

நெல்லும் கரும்பும் கழனிக்கு அழகு;  தாமரைக்கொடி குளத்துக்கு அழகு ; நாணம் பெண்மைக்கு அழகு ; அறச்செயல்கள் ஆண்மைக்கு அழகாகும் !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),01]

{17-11-2021}

-------------------------------------------------------------------------------------------------