விரும்பும் பதிவைத் தேடுக !

நாற்றமுரைக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாற்றமுரைக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 நவம்பர், 2021

நாற்றமுரைக்கும் மலருண்மை - பாடல்.48 - வை.வேதரெத்தினம் உரை !

 

உலகியல்நெறி சார்  கருத்துக்களை எடுத்துரைக்கும் நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர்  இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (48)

--------------------------

நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய

மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்

அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்

முகம்போல முன்னுரைப்ப தில்

 

-------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-------------------------------------------------------------------------------------------------

நாற்றம் உரைக்கும் மலர் உண்மை கூறிய

மாற்றம் உரைக்கும் வினை நலம், தூக்கின்

அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும் முன்னம்

முகம் போல முன் உரைப்பது இல்.

-------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

 

ஒரு இடத்தில் பூ இருக்கிறது  என்பதை, அதன் நறுமணமே அனைவருக்கும்  காட்டிக் கொடுத்துவிடும் !

 

கேள்விகளுக்கு ஒருவன் இறுக்கும் விடைகளே, அவன் செயல்திறனை நமக்குக்  காட்டிக் கொடுத்துவிடும் !

 

ஒருவன் நெஞ்சில் நிறைந்திருக்கும் தீய எண்ணங்களை அவன் மனமே அவனுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் !

 

அதுபோல, ஒருவனது உள்ளத்தில் ஒளிந்திருக்கும்  உணர்வுகளை அவனது முகமே  வெளிப்படுத்திக்   காட்டிவிடும் !

 

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

மலர் உண்மை = மலரின் இருப்பை ;  நாற்றம் உரைக்கும் = அதன் மணமே அறிவிக்கும் ; வினை நலம்  = ஒருவனது செய்கைத் திறத்தை ; கூறிய மாற்றம் உரைக்கும் = அவன் சொன்ன சொல்லே அறிவிக்கும் ; தூக்கின் = ஆராய்ந்தால் ; அகம் பொதிந்த தீமை = நெஞ்சிற் செறிந்த தீமைகளை ; மனம் உரைக்கும் = அவனது நெஞ்சமே அவனுக்கு அறிவிக்கும் ; முன்னம் = ஒருவன் உள்ளக் குறிப்பை ; முகம் போல = அவன் முகத்தைப் போல ; முன் உரைப்பது இல் = முற்படத் தெரிவிப்பது வேறில்லை !

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

மலரின் இருப்பினை அதன் மணமும், ஒருவன் செயல் திறனை அவன் சொல்லும், நெஞ்சிற் செறிந்த தீமையை அவன் நெஞ்சமும், உள்ளக்  குறிப்பை முகமும் அறிவித்து விடும் !

 

 

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),11]

{27-11-2021}

-------------------------------------------------------------------------------------------