விரும்பும் பதிவைத் தேடுக !

வளப்பாத்தியுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வளப்பாத்தியுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 நவம்பர், 2021

வளப்பாத்தியுள் வளரும் வண்மை - பாடல்.16 - வை.வேதரெத்தினம் உரை !

கடைச்சங்க காலமான கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியமான நான்மணிக்கடிகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்த நாகனார் என்னும் பெரும்புலவர் இந்நுலை இயற்றியுள்ளார். இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (16)

------------------------------

வளப்பாத்தி  யுள்வளரும்  வண்மை;  கிளைக்குழாம்

இன்சொற்  குழியுள்  இனிதெழூஉம்;  வன்சொல்

கரவெழூஉம்  கண்ணில்  குழியுள்;  இரவெழூஉம்

இன்மைக்  குழியுள்  விரைந்து.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

 

ஈகை என்னும் போற்றத் தக்க பயிரானது  செல்வம் என்னும் பாத்தியுள் தான் செழித்து வளரும் !

 

நம்மைச் சார்ந்த உறவினர்கள் என்னும் பயிர்  நாம் உதிர்க்கும் இன்சொல் என்னும் பாத்தியில் தான் வளமாக வளரும் !

 

வன்சொல்லோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர், கண்ணோட்டம் (அருள்) இன்மை என்னும் பாத்தியுள் தான் வேர்விட்டுப் பெருகி வளரும் !

 

அதுபோல், ”இரத்தல் என்னும் பயிர் வறுமை குடிகொண்டிருக்கும் பாத்தியுள் தான் விரைவாக வளரும் !

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

வண்மை = “ஈகைஎன்னும் பயிர் ; வளப்பாத்தியுள் வளரும் = செல்வம் என்னும் பாத்தியுள் விளையும் ; கிளைக் குழாம் = உறவினர் கூட்டம் ; இன்சொல் குழியுள் = இன்சொல் எனும் பாத்திய்ள் ; எழூஉம் = செழுமையாய் வளரும் ; வன்சொல் கரவு = வன்சொல்லோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர் ; கண் இல் குழியுள் = கண்ணோட்டம் இன்மை என்னும் பாத்தியுள் ; எழூஉம் = வளரும் ; “இரவு’ = இரத்தல் என்னும் பயிர் ; இன்மைக் குழியுள் = “வறுமையாகிய பாத்தியுள் ; விரைந்து எழூஉம் = உடனே வளரும்.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

ஈகை செல்வத்தால் உண்டாகும்;  உறவினர்க்கு மகிழ்ச்சி இன்சொல்லால் உண்டாகும்; வன்சொல்லும்,  வஞ்சனையுள் கண்ணோடாமையால் உண்டாகும்; இரத்தல் வறுமையால் உண்டாகும் !


-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

-------------------------------------------------------------------------------------------------