விரும்பும் பதிவைத் தேடுக !

எண்ணொக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணொக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2021

எண்ணொக்குஞ் சான்றோர் - பாடல்.101 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (101)

---------------------------------

எண்ணொக்குஞ் சான்றோர் மரீஇயாரின் தீராமை

புண்ணொக்கும் போற்றார் உடனுறைவுபண்ணிய

யாழொக்கும் நட்டார் கழறுஞ்சொல் பாழொக்கும்

பண்புடையாள் இல்லா மனை.

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------

எண் ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை

புண் ஒக்கும் போற்றார் உடன் உறைவுபண்ணிய

யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் பாழ் ஒக்கும்

பண்புடையாள் இல்லா மனை.


-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

ஆன்றோர்களிடம் நெடுநாள் பழகினவரைப் போல, அவரை விட்டு அணுவளவேனும் அகலாது  இருத்தல் அறிவுடைமைக்கு அழகு ஆகும் !

 

இணக்கமாகப் பழக விரும்பாத  எவரிடமும் , அணுக்கமாக இருந்து வாழ்தல்  வலியைத்தரும் புண்ணுக்கு நிகராகும் !

 

நட்புமிக்கவர்கள் இடித்துரைக்கும் நற்சொற்கள்  கடுமை மிக்கதாயினும், அவற்றை யாழின் இனிய ஓசையாகக் கருத வேண்டும் !

 

மனைமாட்சியுடைய மனைவி இல்லாத வீடு பொலிவிழந்து பாழடைந்த உறைவிடத்துக்குச்  சமமானது  என்று கருத வேண்டும் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

மரீஇயாரின் = நெடுநாள் பழகினவரைப் போல ; சான்றோர் = ஆன்றோர்களை ; தீராமை = நீங்காமலிருத்தல் ; எண் ஒக்கும் = அறிவுடைமையை  ஒக்கும் ; போற்றார் = தம்மைப் போற்றி இணங்காதவாரோடு ; உடன் உறைவு = உடனிருந்து வாழ்தல் ; புண் ஒக்கும் = புண்ணினை ஒக்கும் ; நட்டார் = நட்பாயினார் ; கழறும் சொல் = இடித்துரைக்கும் வன்சொல் ; பண்ணிய = நரம்புகளால் இசை கூட்டப்பெற்ற ; யாழ் ஒக்கும் = யாழிசையை ஒக்கும் ; பண்புடையாள் = மனைமாட்சியுடைய மனைவி ; இல்லா மனை = இல்லாத வீடு ; பாழ் ஒக்கும் = பாழ்மனையை ஒக்கும்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

சான்றோரை நீங்காது உறைதல் அறிவுடைமை ஆகும் ; இணக்கமில்லாரோடு உடனுறைதல் புண்ணுக்கு நிகராகும் ; நட்புடையார் இடித்துரைக்கும் சொல் வலிதாயினும் அது யாழோசையைப் போலும் இனிமை உடையதாகும் ; மனைமாட்சி உடைய மனையாள் இல்லாத மனை பாழ்மனையை ஒக்கும்.

 

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

----------------------------------------------------------------------------------------------