விரும்பும் பதிவைத் தேடுக !

எள்ளற்க என்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எள்ளற்க என்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 நவம்பர், 2021

எள்ளற்க என்றும் எளியரென்று - பாடல்.03 - வை.வேதரெத்தினம் உரை !

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ! கி.பிஇரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியம்இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். 101 பாடல்களைக் கொண்ட இந் நூலிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் (03)

------------------

எள்ளற்க  என்றும்  எளியரென்று ! என்பெறினும்

கொள்ளற்க  கொள்ளார்கை  மேற்பட – உள்சுடினும்

சீறற்க சிற்றில் பிறந்தாரை ! கூறற்க !

கூறல்ல  வற்றை விரைந்து !

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

எளிமையான தோற்றத்தை அளவுகோலாக வைத்து எந்தவொரு மனிதரையும்  நாம்  ஏளனமாக  எண்ணலாகாது !


பண்பில்லாத மனிதன்  தருகின்ற பொருள், மதிப்பில் எத்துணை உயர்வுடையதாக இருந்தாலும்  அதை வாங்கலாகாது !


ஏழை எளிய மக்கள் எத்துணைத் தவறு செய்தாலும், அவர்கள் மீது இரக்கமின்றிச் சினம் கொள்ளலாகாது !


அதுபோல்,  எதற்காகவும்  உள்ளம் பதை பதைப்பு அடைந்து, யாரிடத்தும் சொல்லக் கூடாத  சுடுசொற்களைச் சொல்லலாகாது !

-----------------------------------------------------------------------------------------------

சொற் பொருள்:

-----------------------------

எள்ளற்க = இகழ்ந்து பேசாதே ; என் பெறினும் = மிகச் சிறந்த ஒன்றைப் பெறுவதானாலும் கூட ; கொள்ளற்க = வாங்காதே ; கொள்ளார் கை = கொள்ளத் தகாதவருடைய கைகள் ; மேல ஆ = அவர் கை மேலேயும் உன் கை  கை கீழேயும் ; உள் சுடினும் = ஏழையின் செய்கை உன் மனத்தை வருத்தினாலும் ; சீறற்க = சினந்து பேசாதே ; சிற்றில் பிறந்தாரை = ஏழைகளை ; கூறல்லவற்றை = சொல்லத் தகாத சொற்களை ; விரைந்து = பதை பதைப்பு அடைந்து ; கூறற்க = சொல்லிவிடாதே !

------------------------------------------------------------------------------------------------

 கருத்துச் சுருக்கம்:

--------------------------------

எவரையும்  எளியவர் என்று இகழாதே ! சிறந்த பொருளாயினும் தகாதவர் தந்தால் வாங்காதே !  ஏழை எளியோரை எதற்காகவும் சினந்துகொள்ளாதே ! அதுபோல் தகாத சொற்களைப் பதை பதைத்துச் சொல்லிவிடாதே !


-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,துலை(ஐப்பசி),30]

{16-11-2021}

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------