விரும்பும் பதிவைத் தேடுக !

மறையறிப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறையறிப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

மறையறிப வந்தண் புலவர் - பாடல்.91 - வை.வேதரெத்தினம் உரை !


விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (91)

---------------------------

மறையறிப வந்தண் புலவர் முறையொடு

வென்றி யறிப அரசர்கள்என்றும்

வணங்கல் அணிகலஞ் சான்றோர்க்கு அஃதன்றி

அணங்கல் வணங்கின்று பெண்.

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------

மறை அறிப அந்தண் புலவர்; முறையொடு

வென்றி அறிப அரசர்கள்; – என்றும்

வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி

அணங்கல் வணங்கின்று பெண்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்களாகிய  புலவர் பெருமக்கள்  தமிழ் மறையாகிய திருக்குறள் போன்ற நூல்களைக் கற்றுத் துறை போகிய விற்பன்னர்களாகத் திகழ்வார்கள் !

 

குடிமக்களை ஆளும் அறவழி நெறிமுறைகளையும், போரில் பகைவர்களைப் புறங்கண்டு வெற்றி கொள்ளும் வழிமுறைகளையும்  துல்லியமாக அறிந்து பின்பற்றுபவரே சிறந்த அரசராவார் !

 

பெருந்தகைமை நிறைந்தவர்களிடம்  பணிவும் அடக்கமும் இயல்பாகவே நிறைந்திருக்கும் என்பதால்  அவர்களுக்குப் பெருமைதரும் அணிகலன்களாக இவை இரண்டும் என்றும் விளங்கும் !

 

கணவருடன் கருத்தொருமித்து இல்லறத்தை இயற்றிச் செல்லும் மனைவி, கணவரைத்தான் உயர்வாகக் கருதுவாளேயன்றி, கடவுள் வழிகாட்டுவார் என்று கற்பனையாக நம்பித் தவறு செய்யத் துணியாள் !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

 

அந்தண் புலவர் = அந்தண்மையுடைய அறிஞர்கள் ; மறை அறிப = நான்மறைப் பொருளை அறிவார்கள் ; அரசர்கள் = மன்னர்கள் ; முறையோடு = நடுவுநிலையோடு ; வென்றி = வெற்றியும் ; அறிப = அறிவார்கள் ; சான்றோர்க்கு = பெருந் தகைமை நிறைந்தவர்களுக்கு ; என்றும் = எப்பொழுதும் ; வணங்கல் = வணங்குதலே ; அணிகலம் = அணிகலம் போல்வதாம் ; அஃதன்றி = அதுவேயுமல்லாமல் ; அணங்கல் = கணவனை அல்லாத வேறு தெய்வங்களை ; பெண் வணங்கின்று = பெண்மக்கள் வணங்குதலில்லை.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

அந்தணர் மறை அறிப ; அரசர் குடிகளை ஆளும் அறமுறையும் பகைவர்களைப் புறங்காணும் வெற்றியும் அறிப ; சான்றோர்க்கு அணிகலம் என்றும் வணக்கம் உடையராய் இருத்தல் ; பெண்டிர் கணவனையன்றி வேறு தெய்வம் தொழார்.

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

---------------------------------------------------------------------------------------------