விரும்பும் பதிவைத் தேடுக !

கண்டதே செய்பவாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டதே செய்பவாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2021

கண்டதே செய்பவாங் கம்மியர் - பாடல்.41 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பிநாகனார் என்னும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட நூல் நான்மணிக்கடிகை. உலகியல்நெறி சார் கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கும் நாகனார், பாடல் தோறும் நான்கு  கருத்துகளை வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (41)

------------------------

கண்டதே செய்பவாங்  கம்மியர்; உண்டெனக்

கேட்டதே செய்ப புலனாள்வார்வேட்ட

இனியவே செய்ப அமைந்தார்முனியாதார்

முன்னிய செய்யுந் திரு.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------

கண்டதே செய்பவாம் கம்மியர்; உண்டு எனக்

கேட்டதே செய்ப புலன் ஆள்வார்வேட்ட

இனியவே செய்ப அமைந்தார்முனியாதார்

முன்னிய செய்யும் திரு.

 

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

கம்மியர் எனப்படும் எந்திரச் சிற்பிகள், தாம்  கண்ணால் கண்ட பொருள்களை அதே வடிவில் அப்படியே  செய்து முடிப்பர் !

 

பயனுடையது  எனத் தம் கல்வி  கேள்விகளால்  தெளிவடைந்த செயல்களை மட்டுமே,  தம் அறிவை அடக்கியாளும் பெரியோர் செய்துமுடிப்பர் !

 

நல்லியல்புகள் மிக்க சான்றோர் பிறர் எவற்றை விரும்பினாலும், அவற்றுள்  இனிமையானவற்றையே செய்து முடிப்பர் !

 

எவரையும் சினவாது அன்பு காட்டும்   பெரியோர்கள் தாம் எண்ணியவற்றை எல்லாம் செய்துமுடிப்பர் !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

கம்மியர் =  எந்திரச் சிற்பிகள் (Mechanic);  கண்டதே செய்ப = தாம் கண்ட பொருள்களைப் போன்றவற்றையே   செய்வர்; புலன் ஆள்வார் = அறிவைக் கட்டுப்படுத்தி ஆளவல்ல பேரறிஞர்; உண்டு எனக் கேட்டதே = பயனுண்டு எனக் கேள்வியால் தெளிந்தவற்றையே; செய்ப = செய்வர்; அமைந்தார் = நல்லியல்புகள் அமைந்த சான்றோர்; வேட்ட =  பிறர் விரும்பிய; இனியவே செய்ப = இனிமையானவற்றையே செய்வர்;  திரு = அன்பெனும் செல்வம் மிக்க ;  முனியாதார் = யாரையும் சினந்துகொள்ளாத பெரியோர்கள்;  முன்னிய செய்யும் = எண்ணியவற்றையே முடித்து வைக்கும்

 

--------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------

எந்திரச் சிற்பிகள் தாம் கண்ணாற் கண்ட பொருள்களை அதேவடிவில் செய்து முடிப்பர்;    பயனுள்ளவை எனத் தம் கல்வி கேள்விகளால்  தெளிந்தவற்றையே  அறி9ஞர்கள் செய்வர்;  சான்றோர் பிறர் விரும்பியனவற்றுள்  நன்மை தருவன வனவற்றையே செய்வர்;   எவரையும் சினவாத  அன்புமிக்க பெரியோர்கள் தாம் எண்ணியவற்றை எல்லாம் செய்துமுடிப்பர்.

 

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

------------------------------------------------------------------------------------------------