விரும்பும் பதிவைத் தேடுக !

பறைபட வாழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பறைபட வாழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 நவம்பர், 2021

பறைபட வாழா அசுணமா - பாடல்.04 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக் கடிகை பல கருத்தான பாடல்களைக் கொண்ட இலக்கியம் ! முத்து முத்தான 101 பாடல்களைக் கொண்ட நீதி நூல் ! அதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் (04)

----------------------

 

பறைபட வாழா அசுணமாஉள்ளம்

குறைபட வாழார் உரவோர் – நிறைவனத்து

நெல்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வா

சொல்பட்டால் சாவதாம் சால்பு !

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

 

அசுணமா என்னும் கேகயப் பறவைக்கு பறையொலி பிடிக்காது; பறையொலியைக் கேட்டால் அஃது உயிர் நீத்துவிடும் !

 

அறிவார்ந்த மக்கள் தமது மதிப்புக்கு மாசு நேர்வதை விரும்பமாட்டார்; நேர்ந்தால் உயிர் வாழத் துணியார் !

 

மூங்கில் தூர்களில் அதன் வாணாளில் ஒருமுறைதான் அரிசி விளையும்; விளைந்த பின் அவை உயிர் வாழாது பட்டுப் போகும் !

 

அதுபோல்,  நிறையுடைய சான்றோர் தம்மீது பழிச்சொல் ஏற்படுவதைப் பொறுக்க மாட்டார்; ஏற்பட்டால் அக்கணமே உயிர் துறப்பர் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற் பொருள்:

------------------------------

 

அசுணமா = கேகயப் பறவைகள் (இதை மயில் என்கின்றனர் சிலர் ) பறைபட வாழா = பறையின் ஓசை தம் செவியிற் பட்டால் உயிர் வாழமாட்டா; உரவோர் = அறிவுடையோர் ; உள்ளம் குறைபட வாழார் = தமது பெருநிலை குறைபட்டால், உயிர் தாங்க மாட்டார்; நிறைவனத்து = மரங்கள் நிறைந்தகாட்டிலுள்ள ;  வெதிர் = மூங்கில்  ; நெல்பட்ட கண்ணே = அகவை முதிர்ந்து  நெல் விளையும் காலத்தில்; சாம் = பட்டுப்போகும்  ;  சால்பு = நிறையுடைய சான்றோர்; தனக்கு ஒவ்வாச் சொல்பட வாழாது = தமது நிறைவுக்குக் குறைவான இழிவுரைகள் உண்டானால் உயிர் வாழ மாட்டார் .

 

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------

 

அசுணமா பறையொலி கேட்டால் உயிர் வாழாது;  அறிவுடையோர் தம் மதிப்புக்கு மாசு ஏற்பட இசையார் உயிர்நீப்பர்; மூங்கில் தூர் அரிசி விளைந்தபின் பட்டுப்போகும்; அதுபோல், சான்றோர், பழிச்சொல்  ஏற்பட்டால் உயிர் வாழ விரும்பார் !

 

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை; 

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர், 

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.!

[தி.:2052, நளி (கார்த்திகை),01] 

{17-11-2021}

-------------------------------------------------------------------------------------------------