விரும்பும் பதிவைத் தேடுக !

மழையின்றி மாநிலத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழையின்றி மாநிலத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 நவம்பர், 2021

மழையின்றி மாநிலத்தார்க்கில்லை - பாடல்.49 - வை.வேதரெத்தினம் உரை !

 

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  நாகனார்  வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (49)

--------------------------

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை, மழையும்

தவமிலார் இல்வழி இல்லை, தவமும்

அரச னிலாவழி இல்லை, அரசனும்

இல்வாழ்வார் இல்வழி யில்.

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------

மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்

தவம் இலார் இல்வழி இல்லை, தவமும்

அரசன் இலாவழி இல்லை அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்.

 

-----------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

 

இப்பூவுலகத்தில் உயிர்கள் செழித்து வளர உதவுகின்ற   மழை இல்லாவிட்டால் மக்களுக்கு நல்வாழ்வு என்பது  ஒருநாளும்  இல்லை  !

 

அம்மழையும், தன்னலம் துறந்து பிறர் நலம் நாடும் நல்லவர்கள் இல்லாத ஊர்களில் (தவம் இலார்) பெய்வதே இல்லை !

 

அத்தகைய நல்லவர்களும்  நெறி தவறாது இருத்தல்  என்பது முறை தவறாத ஆட்சியாளர்கள் இல்லாத நாட்டில் இயல்வதும் இல்லை !

 

அதுபோல், நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டில் முறை தவறா ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு  வர   முடிவதும் இல்லை !

 

-----------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

மழையின்றி = மழையில்லாமல் ; மாநிலத்தார்க்கு = இப்பேருலகத்தின் மக்கட்கு ; இல்லை = நலமில்லை ; மழையும் = அம்மழை தானும் ; தவம் இலார் = தவம் செய்தல் இல்லாதவர்கள் ;  இல் வழி = இருப்பிடங்களில் ; இல்லை = பெய்தலில்லை ; தவமும் = அவ்வியல்பினதான தவம் செய்தலும் ; அரசன் இலாவழி = செங்கோலரசன் இல்லாதவிடத்து ; இல்லை = நிகழ்தலில்லை ; அரசனும் = அச்செங்கோலரசனும் ; இல்வாழ்வார் = குடிமக்கள் ; இல்வழி = இல்லாதவிடத்து ; இல் = இலன் ஆவான்.

 

-----------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------

மழை இல்லாவிட்டால் உலகத்து மக்களுக்கு நலமில்லை; அம்மழையும் தவமுடையார் இல்லாதவிடத்துப் பெய்தல் இல்லை; அத் தவம் செய்தலும் முறையான அரசன் இல்லாத நாட்டில் நிகழ்தல் இல்லை; அவ்வரசனும் குடிகள் இல்லாதவிடத்தில் இருப்பதில்லை !


--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),13]

{29-11-2021}

--------------------------------------------------------------------------------------------