விரும்பும் பதிவைத் தேடுக !

யாறுள் அடங்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாறுள் அடங்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 நவம்பர், 2021

யாறுள் அடங்கும் குளமுள - பாடல்.54 - வை.வேதரெத்தினம் உரை !

 

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை   வலியுறுத்துகிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (54)

--------------------------------

யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்

மன்னர் விழையுங் குடியுளதொன்மரபின்

வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை

வேள்வியோ டொப்ப உள.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

யாறுள் அடங்கும் குளம் உள, வீறு சால்

மன்னர் விழையும் குடி உளதொல் மரபின்

வேதம் உறுவன பாட்டு உள, வேளாண்மை

வேள்வியோடு ஒப்ப உள.

 

-----------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

ஆற்று வெள்ளம் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ள அளவுக்குப் பெரிய குளங்களும் இவ்வுலகில் உள்ளன !

 

நாடாளும் மன்னர் விரும்பக் கூடிய அளவுக்குக் கற்றறிந்து துறைபோகிய குடிமக்களும் இவ்வுலகில் உள்ளனர் !

 

மறை நூல்கள் எடுத்தோதும் சிறந்த வாழ்வியல் கருத்துகளை உள்வாங்கி உருவான பாடல்களும் இவ்வுலகில் உள்ளன !

 

அதுபோல்,  உயிரினங்களின் நல்வாழ்வுக்காக நடத்தப்பெறும் வேள்விகளுக்கு நிகரான ஈகைகளும் இவ்வுலகில் உள்ளன !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

 

யாறு = ஆற்று வெள்ளம் ; உள் அடங்கும் = தம்முட் புகுந்து அடங்கத் தக்க ;  குளம் உள = குளங்களும் நாட்டில் உள்ளன ; வீறு சால் = சிறப்பு அமைந்த ; மன்னர் விழையும் = அரசர்களால் விரும்பப்படும் ; குடி உள = குடி மக்களும் உள்ளனர் ;  தொல் மரபின் = பழைய முறைமையினை உடைய ; வேதம் உறுவன =  வேதக் கருத்துகளை பொருந்துவவாகி ; பாட்டு உள = சில தனிப்பாட்டுகளும் உள்ளன ; வேள்வியோடு ஒப்ப = வேள்விகளுக்கு நிகரானவாகிய ; வேளாண்மை உள = ஈகைகளும் உள்ளன.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

ஆறுகள் தம்முள் அடங்கத்தக்க அளவுக்குப் பெரிய குளங்களும் உள்ளன; அரசரால் விரும்பப்படும் குடிகளும் உள்ளன ; வேதக் கருத்துகளையுடைய தனிப்பாடல்களும் உள்ளன. அதுபோல் வேள்விக்கு நிகரான ஈகைகளும் உள்ளன.

 

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி (கார்த்திகை),14]

{30-11-2021}

------------------------------------------------------------------------------------------------