விரும்பும் பதிவைத் தேடுக !

கல்லிற் பிறக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்லிற் பிறக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 நவம்பர், 2021

கல்லிற் பிறக்கும் கதிர்மணி - பாடல்.07 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் இயற்றிய நான்மணிக் கடிகை என்னும் நூல் கி.பி. 2-ஆம்  நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியம். பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற் பிரிவைச் சார்ந்தது இந்நூல். இதிலிருந்து ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல்:  (07).

----------------------

 

கல்லிற் பிறக்குங் கதிர்மணி; காதலி

சொல்லிற் பிறக்கும் உயர்மதம்  மெல்லென்று

அருளிற் பிறக்கும் அறநெறி; எல்லாம்

பொருளிற் பிறந்து விடும்.

----------------------------------------------------------------------------------------------

 கருத்துரை:

------------------------

கண்களைப் பறிக்கும்  ஒளிமிகுந்த மணிகள் எல்லாம் கற்களில் (கல் வடிவில்) பிறக்கின்றன !

 

ஆடவனுக்கு எழுச்சி தரும்  வீரம் அவனால் விரும்பப்படும் காதலியின் சொல்லில் பிறக்கிறது !

 

மனதில் ஊறும் மென்மையான அருளுணர்வில் பிறக்கின்றன  அறம் பொருந்திய நல்வழிகள் !

 

ஆனால்,  அவ்வறத்தோடு இன்பம் முதலிய எல்லா  நற்பேறுகளும்   செல்வத்தினாற்  கூடப்  பிறக்கின்றன !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------------

கதிர்மணி = ஒளியுள்ள மணிகள் ; கல்லிற் பிறக்கும் = மலையில் உண்டாகும் ; உயர் மதம் = மிக்க களிப்பு ; காதலி சொல்லிற் பிறக்கும் = காதலியினது இன்சொல்லினால் தோன்றும் ; அறநெறி = அறவழிகள் ; மெல் என்ற அருளில் பிறக்கும் = மென்மை பொருந்திய அருளினிடம் உண்டாகும் ; எல்லாம் = அவ்வறதோடு ஏனைய இன்பம் முதலிய எல்லாமும் ; பொருளில் பிறந்துவிம் = செல்வத்தினால் உண்டாய்விடும்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------

மணிகள் மலையிற் பிறக்கும்; இன்பம் காதலியின் சொல்லிற் பிறக்கும்; அறநெறி அருளிற் பிறக்கும்;  ஆனால் அறம், இன்பம் முதலிய எல்லாப் பேறுகளும் செல்வத்தினாலும் உண்டாகும்.

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),01]

{17-11-2021}

-------------------------------------------------------------------------------------------------