விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 டிசம்பர், 2021

ஈத்துண்பான் என்பான் - பாடல்.62 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (62)

-------------------------------

ஈத்துண்பா னென்பான் இசைநடுவான்; மற்றவன்

கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற

நகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்

பாடறியா தானை இரவு.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான், மற்று அவன்

கைத்து உண்பான் என்பான் காங்கி எனப்படுவான், தெற்ற

நகை ஆகும் நண்ணார் முன் சேறல், பகை ஆகும்

பாடு அறியாதானை இரவு.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

தன்னலம் துறந்து பிறர் நலம் கருதி அனைவர்க்கும் கொடுத்து உண்ணும் குணமுடையவன், இவ்வுலகில் நிலையான புகழை ஈட்டுவான் !

 

அவ்வாறு கொடுத்து  உண்ணும்  குணம் படைத்தவன் கையிலிருப்பதைப் பறித்து உண்பவன் பேரவா  உடைய பிசினேறி  எனப்படுவான் !

 

தன்னை விரும்பாத மனிதனிடம் தானாக விரும்பிச் சென்று ஒன்றைப் பெறுதல் தெளிவான இகழ்ச்சிக்கு இடமாகிவிடும் !

 

அதுபோல், தனது தகுதியை மறந்து ஒழுகும்  ஒரு மனிதனிடம், ஏதாவது பொருள் வேண்டி இரந்து செல்லல், பகைமையை வளர்க்க இடம் தந்துவிடும் !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

 

ஈத்து உண்பான் என்பான் = பிறர்க்குக் கொடுத்து  உண்பவன் எனப்படுபவன் ; இசை நடுவான் = உலகத்தில் தன் புகழை நிறுத்துவான் ; அவன் கைத்து உண்பான் = அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையும் பறித்து உண்பவன் ; காங்கி எனப்படுவான் = அவா உடையன் எனப்படுவான் ; நண்ணார் முன் = விரும்பாதவர் முன் ; சேறல் = ஒன்றை விரும்பி அடைவது ; தெற்ற நகையாகும் = தெளிவாகவே இகழ்ச்சி உண்டாகும் ; பாடு அறியாதானை = தனது தகுதி அறியாதவனை ; இரவு = இரந்து செல்லல் ; பகையாகும் = பகைமைக்கே இடமாகும்.

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

பிறர்க்குக் கொடுத்து உண்பவன் புகழ் உடையவன் ஆவான் ; அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையே பறித்து உண்பவன் அவா மிக்கவன் ஆவான் ; தன்னை விரும்பாதார் முன் தான் விரும்பிச் செல்லல் தெளிவான இகழ்ச்சிக்கு இடமாகும். தகுதி அறியாதவனை ஒன்று வேண்டிச் செல்லல், பகைக்கு இடமாகும் !

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

"நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

---------------------------------------------------------------------------------------------

இனிதுண்பான் என்பான் - பாடல்.61 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (61)

-------------------------------


இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்

முனிதக்கா னென்பான் முகனொழிந் துவாழ்வான்

தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்

இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்

முனியா ஒழுக்கத் தவன்


-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

இனிது உண்பான் என்பான் உயிர்கொல்லாது உண்பான்

முனி தக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்

தனியன் எனப்படுவான் செய்த நன்றி இல்லான்

இனியன் எனப்படுவான் யார்யார்க்கே யானும்

முனியா ஒழுக்கத்தவன்

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

பிறஉயிர்களைக் கொல்லாது காய்கறி உணவை உண்பவனே, இனிய உணவை உண்பவன் என்று உலகத்தால் மதிக்கப்படுகிறவன் ஆகிறான் !

 

முகமலர்ச்சியின்றி எப்போதும் கடுகடுப்பாய் இருப்பவன் எல்லோராலும் வெறுக்கப்பட்டு மிகவும் தூற்றப்படுபவன் ஆகிறான் !

 

பிறருக்கு நன்மை ஏதும் செய்யாமல் தனக்கெனவே வாழ்கிறவன், உற்றார், உறவு, சுற்றம், நட்பு  ஏதுமின்றி தனியனாய் வாழ்கிறவன் ஆகிறான் !

 

யாராலும் வெறுக்கப்படாத நல்லொழுக்கத்தை உடையவன், இவ்வுலகத்தால் இனியவன் என்று  போற்றப்படுபவன் ஆகிறான் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

 

இனிது உண்பான் என்பான் = இனிய உணவை உண்பவன் என்று சொல்லப்படுபவன்  ; உயிர் கொல்லாது = ஓருயிரையுங் கொல்லாது ; உண்பான் = காய்கறி உணவுகளையே உண்பவனாவான் ; முனிதக்கான் என்பான் = எல்லாரானும் வெறுக்கத் தக்கவன் என்று சொல்லப்படுபவன் ; முகன் ஒழிந்து = முக மலர்ச்சி இல்லாமல் ; வாழ்வான் = கடுகடுப்பாய் வாழ்பவனாவான் ; தனியன் எனப்படுவான் = துணை இல்லாதவன் என்று  சொல்லப்படுபவன்  ; செய்த நன்று இல்லான் = தன்னாற் செய்யப்பட்ட நன்மை ஒன்றும் இல்லாதவன் ஆவான் ; இனியன் எனப்படுவான் = இனியவன் என்று சொல்லப்படுபவன் ; யார்யார்க்கேயானும் = எல்லோராலும் ; முனியா ஒழுக்கத்தவன் = வெறுக்கப்படாத ஒழுக்கத்தை உடையவனே ஆவான்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

ஓருயிரையும் கொல்லாது காய்கறி உணவுகளை உண்பவனே இனிய உணவை உண்பவனாவான் ; முகமலர்ச்சி இல்லாமல் கடுகடுப்பாய் உயிர்வாழ்வோனெல்லோரானுன்  வெறுக்கப்படுவான் ; யார்க்கும் உதவி செய்யாதவன் துணை இல்லாதவன் ஆவான் ; எவராலும் வெறுக்கத் தகாத  ஒழுக்கத்தை உடையவான் இனியவன் என்று சொல்லப்படுவான்.

 

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

----------------------------------------------------------------------------------------------

 

 

என்றும் உளவாகும் நாளும் - பாடல்.60 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (60)

--------------------------------

என்று முளவாகு நாளும் இருசுடரும்

என்றும் பிணியுந் தொழிலொக்கும்என்றும்

கொடுப்பாருங் கொள்வாரும் அன்னர் பிறப்பாருஞ்

சாவாரும் என்றும் உளர்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------

என்றும் உளவாகும் நாளும், இரு சுடரும்;

என்றும் பிணியும் தொழிலும் ஒக்கும்; - என்றும்

கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்

சாவாரும் என்றும் உளர்.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------

இந்தப் பேரண்டத்தில் விண்மீன்களும் திங்களும் கதிரவனும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றன  !

 

மனிதனின் செயல்களை முடக்கிப் போடும் நோயும், அவன் செய்யும் தொழில்களும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றன !

 

இல்லையென்று வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் ஈவோரும், அவற்றைப் பெறுவோரும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றனர் !

 

அதுபோல், இந்த உலகத்தில் புதிதாகப் பிறப்பவர்களும் இறப்பவர்களும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றனர் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

என்றும் = எக்காலத்தும் ; நாளும் = விண்மீன்களும் ; இருசுடரும் = திங்களும் சூரியனும் ; உளவாகும் = உள்ளனவாகும் ; என்றும் = எக்காலத்திலும் ; பிணியும் = செயலுக்கு இடையூறான நோயும் ; தொழில் = உழவு முதலிய தொழில்களும் ; ஒக்கும் = உள்ளன ஆகும் ; என்றும் = எக்காலத்திலும் ; கொடுப்பாரும் = இல்லை என்னாமல் ஈவாரும் ; கொள்வாரும் = ஏற்பாரும் ; அன்னர் = உளராவர் ; என்றும் = எக்காலத்திலும் ; பிறப்பாரும் = பிறப்பவர்களும் ; சாவாரும் = இறக்கின்றவர்களும் ; உளர் = உளராவார்.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

விண்மீன்களும் திங்களும் சூரியனும் என்றும் உள்ளன; நோயும் முயற்சியும் என்றும் உள்ளன; ஈவாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர் ; பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உளர் !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

-------------------------------------------------------------------------------------------------

மாண்டவர் மாண்ட வினைபெறுப - பாடல்.59 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (59)

-----------------------------

மாண்டவர் மாண்ட வினைபெறுப  வேண்டாதார்

வேண்டா வினையும் பெறுபவேயாண்டும்

பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்

துறப்பார் துறக்கத் தவர்.

 

-----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------

மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார்

வேண்டா வினையும் பெறுபவேயாண்டும்

பிறப்பார் பிறப்பு ஆர் அறன் இன்புறுவர்

துறப்பார் துறக்கத்தவர்.

 

-----------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

அறிவால் மாண்படைந்த   பெருமக்கள், அனைத்து மக்களும் உவக்கும்  வண்ணம் அறிவார்ந்த   செயல்களையே  செய்து இன்புறுவர் !

 

அறிவின்   மாண்பைப்   புறந்தள்ளி வாழ்வோர் தம்மால் வேண்டப்படாத தீயபலன்களை அடைந்து   நாளும்  துன்புறுவர்   !

 

உயர்ந்த பிறவியாம் மனிதப் பிறவியெடுத்துப்   பிறந்தவர்கள் அப்பிறப்பிற்குரிய  அறத்தை விரும்பிச் செய்து இருமையும் இன்புறுவர் !

 

அதுபோல் யான், எனது என்னும் தன்னலப் பற்றைத் துறந்து பொதுநலம் பேணுவோர் வீட்டுலகப் பேற்றை எளிதில் அடைந்து இன்புறுவர் !

 

-----------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

மாண்டவர் = அறிவால் மாட்சிமைப்பட்டவர்கள் ; மாண்ட வினை = மாட்சிமைப்பட்ட செயல்களை ; பெறுப = செய்யப்பெறுவர் ; வேண்டாதார் = அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள் ; வேண்டா வினையும் = தம்மால் வேண்டப்படாத தீவினைப் பயன்களையும் ; பெறுப = இம்மை மறுமைகளில் பெறுவார்கள் ; யாண்டும் = எப்பொழுதும் ; பிறப்பார் = மேற்பிறப்பில் பிறப்பவர்கள் ; பிறப்பு ஆர் = அப்பிறப்பிற் பொருந்தும் ; அறன் = அறத்தையே ; இன்புறுவர் = இருமையிலும் விரும்பி இன்புறுவர் ; துறப்பார் = யான், எனது என்னும் பற்றைத் துறப்பவர்கள் ; துறக்கத்தவர் = வீட்டுலகத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்.

 

-----------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

அறிவால் மாட்சிமைப்பட்டவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வார்கள்; அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள், தீவினைப் பயன்களையும் பெறுவார்கள்; உயர்ந்த பிறப்பிற் பிறப்பவர்கள் அப்பிறப்பின் அறத்தை விரும்பிச் செய்து இருமையும் இன்புறுவர்; பற்றைத் துறப்பவர்கள் வீட்டின்பத்துக்கு உரியர் ஆவார்கள்.

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

---------------------------------------------------------------------------------------------

கற்றன்னர் கற்றாரைக் காதலர் - பாடல்.58 - வை.வேதரெத்தினம் உரை !

 

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  நாகனார் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (58)

------------------------------

கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்

செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர்தெற்றென

உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும்

புற்றன்னர் புல்லறிவி னார்.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------

கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண் ஓடார்

செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தார்தெற்ரென

உற்றது உரையாதார் உள் கர்ந்து பாம்பு உறையும்

புற்று அன்னர் புல் அறிவினார்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

கற்றறிந்த சான்றோரைப்  பிரியாமல் அவர்களுடன் இருப்பவர்கள், தாமும்  கற்றுயர்ந்து, அச்சான்றோர்க்கு ஒப்பாக விளங்குவர் !

 

கண்ணோட்டம் என்னும் இரக்கவுணர்வு இல்லா மாந்தர்கள், பிறருக்கு இடர் செய்யும்  வன்மன  மானிடர்க்கு ஒப்பாவர் !

 

உண்மையைத் தெளிவாக உரைக்காமல் அதற்குத் திரை போட்டு மூடி மறைக்க முயல்பவர்கள், பகைவருக்கு ஒப்பாவர் !


அதுபோல், பிறருக்குக் கேடு நினைக்கும் புன்மதியாளர்கள் பாம்புகள் மறைந்து வாழும் மண் புற்றுக்கு  ஒப்பாவர் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

கற்றாரை = கல்வியறிவு  உடையவர்களை ; காதலர் = அன்பால் விரும்புகின்றவர்கள் ; கற்றன்னர் = அக்கல்வியறிவு உடையவர்களை ஒப்பர் ; கண் ஓடார் = பிறர்பால் கண்ணோட்டம் (அருள்,இரக்கம்,நாகரிகம்) இல்லாதவர்கள் : செற்றன்னர் = துன்பம் செய்வாரை  ஒப்பர் ; தெற்றென = தெளிவாக ; உற்றது = உண்மையை ; உரையாதார் = சொல்லாதவர்கள் ; செற்றாரைச் சேர்ந்தவர் = பகைவரை ஒப்பர் ; புல்லறிவினார் = கீழ்மை அறிவுடையோர் ; பாம்பு உள் கரந்து உறையும் = பாம்பு உள்ளே மறைந்து வாழும் ; புற்று அன்னர் = புற்றினை ஒப்பர்.

 

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

கல்வியறிவு உடையவர்களை விரும்பி உடன் இருப்பவர்கள் அக்கல்வி அறிவுடையவர்களுக்கு ஒப்பாவார் ; கண்ணோட்டம் (இரக்கம்)  இல்லாதவர்கள், இடர் செய்வாரை  ஒப்பர் ; உண்மையைத் தெளிவாகச் சொல்லாதவர்கள் பகைவருக்கு நிகராவார்கள் ; சிற்றறிவுடைவர்கள் பாம்புக்கு ஒப்பாவார்.


--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

---------------------------------------------------------------------------------------