விரும்பும் பதிவைத் தேடுக !

பிறக்குங்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறக்குங்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2021

பிறக்குங்கால் பேரெனவும் பேரா - பாடல்.43 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பிநாகனார் என்னும் சங்க காலப் புலவர்  இயற்றிய  நூல் நான்மணிக்கடிகை. உலகியல்நெறி சார் கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கும் நாகனார், பாடல் தோறும் நான்கு  கருத்துகளை வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (43)

-------------------------

பிறக்குங்கால் பேரெனவும் பேரா; இறக்குங்கால்

நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும்; - நல்லாள்

உடம்படின் தானே பெருகுங்கெடும்பொழுதில்

கண்டனவுங் காணாக் கெடும்.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

பிறக்கும்கால் பேர் எனவும் பேரா; இறக்கும் கால்

நில் எனவும் நில்லா உயிர் எனைத்தும்; - நல்லாள்

உடம்படின் தானே பெருகும்கெடும்பொழுதில்

கண்டனவும் காணாக் கெடும்.

 

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

உயிரினங்கள்  இந்த உலகத்தில் பிறக்கும் போது, “ஏ உயிரே ! நீ இந்த உடலை விட்டு நீங்கி விடுஎன்று யார் கட்டளையிட்டாலும்  அதற்காக அது நீங்கிவிடாது !

 

இறக்கும் போது, “ஏ உயிரே ! நீ இந்த உடலை விட்டு நீங்காமல் அதிலேயே தங்கியிருஎன்று யார் கட்டளையிட்டாலும் அதற்காக அது தங்கிவிடாது !

 

ஒரு மனிதனுக்கு, நல்ல மனிதர்களின் ஆதரவும், துணையும், மதியுரையும் வலுவாக இருந்தால், அவனிடம் செல்வமும் நிரம்ப வந்து  சேரும் !

 

அதுபோல், நல்ல மனிதர்களின் ஆதரவும் துணையும், மதியுரையும்  அவனைவிட்டு நீங்கிவிட்டால்சேர்ந்திருந்த செல்வமும்  விரைவில் குறைந்து  மறைந்து  போய்விடும் !

 

-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------

உயிர் எனைத்தும் = உயிரெல்லாம்பிறக்குங்கால் = இந்த உலகத்தில் பிறக்கும் போது; பேர் எனவும் பேரா = உடலைவிட்டு நீங்கிவிடு என்றாலும் நீங்காது ; இறக்குங்கால் = அவை இறக்கும் போதுநில் எனவும் நில்லா  = இவ்வுடலிலேயே நில் என்றாலும் நில்லாது; நல்லாள் = நல் + ஆள் = நல்லாள் = நல்லவர்கள்; உடம்படின் = துணை வலுவாக இருந்தால்; தானே பெருகும் = செல்வமானது தானே பெருகும்; கெடும் பொழுதில் = நல்லவர்களின் துணை நீங்கிப் போகும் காலத்தில் ; கண்டனவும் = முன்பு  சேர்த்து வைத்திருந்த பொருள்கள் கூட ; காணா = காணப்படாது ; கெடும் = அழிந்துபோகும்.

 

-------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

உயிர்கள் பிறக்கும் போதுஉடலை விட்டு நீங்குகஎன்றால் உயிர்  நீங்கிவிடாது; இறக்கும் போதுஉடலிலேயே தங்கிவிடுஎன்றாலும் உயிர் தங்கிவிடாது. நல்லவர்கள் துணையிருந்தால் செல்வம் தானே சேரும்; நல்லவர்கள் துணை நீங்குகையில்  செல்வமும் நீங்கிவிடும் !

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

-------------------------------------------------------------------------------------------------