விரும்பும் பதிவைத் தேடுக !

கல்லா ஒருவர்க்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்லா ஒருவர்க்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் - பாடல்.85 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (85)

--------------------------------

 

கல்லா ஒருவர்க்குத் தம் வாயிற் சொற்கூற்றம்

மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்

அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகு வாள்.

 

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------

 

கல்லா ஒருவர்க்குத் தம் வாயின் சொல் கூற்றம்;

மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;

அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே

இல்லத்துத் தீங்கு ஒழுகுவாள்..

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

 

கல்வியறிவு இல்லாத மூடனின் வாயிலிருந்து வெளிப்படும் பொய், குறளை போன்ற   தீய சொற்களே அவனது  வாழ்வுக்கு அழிவைத் தரும் கூற்றமாக அமையும் !

 

எத்துணை வளமான மண்ணில் வளர்ந்தாலும், மெல்லிய இலைகொண்ட வாழைக்கு அது ஈனும் குலையே அதற்கு அழிவைத் தரும் கூற்றமாக அமையும் !

 

தீயவை செய்வதற்கு அஞ்சாது தீயவை செய்துவரும் ஒருவனுக்கு அவன் செய்த தீயவையே  அவன் வாழ்வை அழிக்கும் கூற்றமாக அமையும்  !

 

அதுபோல், இல்லற வாழ்வில் கணவனுக்கு நேர்மை இல்லாத மனைவி அமைந்தால் அம்மனைவியே  அவனது வாழ்வை அழிக்கும் கூற்றமாக அமைவாள் !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------------

 

கல்லா ஒருவர்க்கு = கல்வியறிவு இல்லாத ஒருவருக்கு ; தம் வாயின் சொல் = தமது வாயிலிருந்து வரும் சொல்லே ; கூற்றம் = கூற்றுவனாகும் ; மெல் இலை = மெல்லிய இலைகளை உடைய ; வாழைக்கு = வாழை மரத்துக்கு ; தான் ஈன்ற காய் = தான் வெளிவிட்ட குலையே ; கூற்றம் = கூற்றுவனாகும் ; அல்லவை செய்வார்க்கு = தீயவை செய்யும் மக்கட்கு ; அறம் கூற்றம் = அறக் கடவுளே கூற்றுவனாம் ; இல்லத்து = வீட்டில் இருந்து கொண்டு ; தீங்கு ஒழுகுவாள் = கற்புக் கேடாக மறைவாய் ஒழுகும் மனைவி ; கூற்றமே = தன்னைக் கொண்ட கணவனுக்குக் கூற்றுவனேயாவாள்.

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------

 

கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர் வாயிற் பிறக்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவனாம் ; வாழை மரத்துக்கு அஃது ஈனும் குலையே கூற்றுவனாம் ; தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவனாம் ; இல்லத்திலிருந்து கொண்டு மறைவாய்க் கற்புக் கெடுபவள் கொண்டானுக்குக் கூற்றுவனேயவாள்.

 

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

----------------------------------------------------------------------------------------------