விரும்பும் பதிவைத் தேடுக !

பல்லினால் நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்லினால் நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 நவம்பர், 2021

பல்லினால் நோய் செய்யும் பாம்பு - பாடல்.14 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக் கடிகை, கடைச்சங்க காலத்திய நூல். இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன ! இந்நூலிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல்:எண்.(14).

------------------------------

 

பல்லினான் நோய் செய்யும்  பாம்பெலாங்  கொல்லேறு

கோட்டால் நோய்செய்யுங்  குறித்தாரை ஊடி

முகத்தான் நோய்செய்வர்  மகளிர்  முனிவர்

தவத்தால்  தருகுவர் நோய்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

 

பல்லினால்  நோய்செய்யும்  பாம்புஎலாம்; – கொல் ஏறு

கோட்டால்  நோய்செய்யும்  குறித்தாரை;   ஊடி

முகத்தால் நோய்செய்வர்  மகளிர்;  முனிவர்

தவத்தால் தருகுவர் நோய்.

-----------------------------------------------------------------------------------------------

பொருள்:

--------------------

 

பாம்புகள்  தம் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் , பிற உயிர்களுக்குத் தம் நச்சுப்  பற்களால்  துன்பம் தரும் !

 

சீண்டப் பெறும் காளை, தான் குறி வைத்துவிட்டால், குறிப்பிட்ட மனிதருக்குத் தன் கூரிய கொம்புகளால் துன்பம் தரும் !

 

பெண்மக்கள், ஊடல் கொண்டு பிணங்கி, தம் முகக் குறிப்பினால் ஆடவர்க்குத் துன்பம் தருவர் !

 

அதுபோல், முனிவர்கள் சினம் கொண்டால், தம்மை இகழ்ந்தவர்களுக்குத்  தமது தவ வலிமையால், துன்பம் தருவர்  !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

பாம்பு எலாம் = எல்லாப் பாம்புகளும் ; பல்லினால் நோய் செய்யும் = பிறர்க்குப் பல்லினால் துன்பம் தரும் ; கொல் ஏறு = கொலை பயிலும் காளை மாடு ; குறித்தாரை = தன்னால் குறித்துக் கொள்ளப்பட்டவர்க்கு ; கோட்டால் =  கொம்புகளால் ; நோய் செய்யும் = துன்பம் தரும் ; மகளிர் = பெண் மக்கள் ; ஊடி = பிணங்கி ; முகத்தால் = தம் முகக் குறிப்பினால் ; நோய் செய்வர் = துன்பம் தருவர் ; முனிவர் = தவமுடையார் ; தவத்தால் = தமது தவ வலிமையால் ; நோய் தருகுவர் = துன்பம் தருவர்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

பாம்பு பல்லாலும், காளை கொம்பாலும், மகளிர் முகத்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்வர்; முனிவர் தவத்தால் துன்பம் தருவர் !


------------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

-----------------------------------------------------------------------------------------------