விரும்பும் பதிவைத் தேடுக !

பொறி கெடும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொறி கெடும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 நவம்பர், 2021

பொறிகெடும் நாணற்ற போழ்தே - பாடல்.46 - வை.வேதரெத்தினம் உரை !


உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் எடுத்துச் சொல்கிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (46)

------------------------

பொறிகெடும்  நாணற்ற  போழ்தேநெறிபட்ட

ஐவரால் தானே வினைகெடும்பொய்யா

நலம்கெடும்  நீரற்ற  பைங்கூழ்நலமாறின்

நண்பினார் நண்பு கெடும்.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------

பொறி கெடும் நாண் அற்ற போழ்தேநெறி பட்ட

ஐவரால் தானே வினை கெடும்பொய்யா

நலம் கெடும்  நீர் அற்ற பைங்கூழ்நலம் மாறின்

நண்பினார் நண்பு கெடும்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

தீய செயல்களைச் செய்வதற்கு நாணப்படாத குணம் ஒருவனிடம் தோன்றுமாயின், அப்பொழுதே அவனிடமுள்ள செல்வம் அனைத்தும் அழிந்துபோகும் !

 

கண், காது, மெய், வாய், மூக்கு என்னும் ஐம்பொறிகளையும் எவனொருவான் அடக்கி  ஆள்கிறானோ, அவனிடம் தீய செயல்கள் எதுவும் நெருங்காது அழிந்து போகும் !

 

நீர் பாய்ச்சி முறையாகப் பயிரிட்டால்  நல்ல விளைச்சலைத் தவறாது தரும் பசும் பயிர்கள் கூட போதுமான நீரைப் பெறாவிட்டால் விளைச்சல் வீழ்ந்து போகும் !

 

அதுபோல், உற்றுழி உதவுவதே நட்புக்கு இலக்கணம் என்னும் நிலையை மறந்து ஒருவன் ஒழுகத் தொடங்கினால் , அந்த நொடியிலேயே நண்பர்களின் இயல்புமாறி நட்புணர்வு அழிந்து போகும் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

நாண் அற்ற போழ்தே = ஒருவனுக்கு நாணம் என்பது நீங்கின போதே; பொறி கெடும் = செல்வம் அழியும்; நெறி பட்ட = தன் வழிப்பட்ட; ஐவரால் = ஐம்பொறிகளால்; வினை தானே கெடும் = தீவினைகள் தாமாகவே ஒழியும்; நீர் அற்ற = நீரைப் பெறாத; பைங்கூழ் = பசும் பயிர்கள்; பொய்யா = பொய்க்காத; நலம் கெடும் = விளைவின் நன்மை கெட்டு ஒழியும்; நலம் மாறி = நட்பின் நலம் மாறுபட்டால்; நண்பினார் நண்பு = நண்பர்களின் நட்பியல்பு; கெடும் = கெட்டுப்போகும்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

தீயவை கண்டு நாணுகின்ற நற்குணம் மாறினால், செல்வம் அழிந்து போகும். ஐம்பொறிகளை அடக்கி ஆள்பவனிடம், தீய செயல்கள் நெருங்காது அழிந்து போகும். போதுமான நீர் கிடைக்காவிட்டால் பயிர்களின் விளைச்சல்  வீழ்ந்து அழிந்து போகும். நட்பின் இலக்கணத்தை உணராவிட்டால் நண்பர்கள் விலகிச்செல்ல, நட்பும் அழிந்து போகும்.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

---------------------------------------------------------------------------------------------