விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 3 டிசம்பர், 2021

கண்ணுள்ளுங் காண்புழி - பாடல்.65 - வை.வேதரெத்தினம் உரை !


விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (65)

------------------------------

கண்ணுள்ளுங் காண்புழிக் காதற்றாம்பெண்ணின்

உருவின்றி மாண்ட வுளவாமொருவழி

நாட்டுள்ளு நல்ல பதியுளபாட்டுள்ளும்

பாடெய்தும் பாட லுள.

 

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

கண்ணுள்ளும் காண்பு உழிக் காதற்று ஆம் – பெண்ணின்

உரு இன்றி மாண்ட உளவாம் – ஒருவழி

நாட்டுள்ளும் நல்ல பதி உள – பாட்டுள்ளும்

பாடு எய்தும் பாடல் உள.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

உலகில் எத்தனையோ மாந்தர்களின் கண்களை நாம் பார்க்க நேர்கிறது; எனினும், அத்தனையுள்ளும் நாம் விரும்பக்கூடியதாக ஒருசிலவேனும் இருக்கவே செய்கின்றன!

 

அழகில்லாத பெண்கள் இவ்வுலகில் நிரம்பவே இருக்கின்றனர்; அவர்களுள் அழகில்லையாயினும் பெருமைக்குரிய  நல்லியல்பு உள்ளோரும் இருக்கவே செய்கின்றனர் !

 

ஒரு நாட்டினுள் பார்க்குமிடமெல்லாம் வறண்ட நிலங்களே காணப்படுவதுண்டு; எனினும் அவற்றுக்கிடையே எங்காவது ஒரு பகுதியில் வளமான ஊர்களும் இருக்கவே செய்கின்றன !

 

அதுபோல், இசை நுட்பமில்லாத  பாடல்கள் எண்ணிறந்தவை இருப்பதுண்டு; எனினும் அவற்றுக்கிடையே இசைப்பெருமை மிக்க பாடல்கள் சிலவேனும் இருக்கவே செய்கின்றன !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

கண்ணுள்ளும் = மக்களின் கண்களுக்குள்ளும் ; காண்புழி = ஆராயுமிடத்து ; காதற்று ஆம் = விரும்பப்படுதலான கண்ணும் உண்டு ; பெண்ணின் = பெண் மக்களுள் ; உரு இன்றி = அழகில்லையாயினும் ; மாண்ட மாட்சிமைப்பட்ட இயல்புகள் ; உள ஆம் = உள்ளனவாகும் ; நாட்டுள்ளும் = ஒரு நாட்டினுள்ளும் ; ஒரு வழி = எங்கேனும் ஒரு பகுதியில் ; நல்ல பதி உள = வளமான ஊர்கள் உள்ளன ; பாட்டுள்ளும் = பாட்டுகளுள்ளும் ; பாடு எய்தும் = பெருமை மிக்க ; பாடல் உள = பாட்டுகள் இருக்கின்றன.

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

கண்களுள்ளும் விரும்பப்படும் கண்கள் உள்ளன ; அழகில்லாத பெண்டிருள்ளும் மாட்சிமைப்பட்ட நல்லியல்பு உள்ளோர் உண்டு ; நாட்டினுள்ளும் ஒரு பாங்கர் வளமான ஊர்கள் உள்ளன ; பாட்டுகளுள்ளும் சிறப்பான பாட்டுகள் உள்ளன.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),17]

{03-12-2021}

----------------------------------------------------------------------------------------------

பழியின்மை மக்களாற் காண்க - பாடல்.64 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார்  என்னும்  பெரும்புலவர்  இயற்றிய நூல் நான்மணிக்கடிகை. இதுபதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை   எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (64)

------------------------------

பழியின்மை மக்களாற் காண்க வொருவன்

கெழியின்மை கேட்டா  லறிக பொருளின்

நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியாற்

போற்றாதார் போற்றப் படும்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------

பழி இன்மை மக்களால் காண்க ; ஒருவன்

கெழி இன்மை கேட்டால் அறிக ; பொருளின்

நிகழ்ச்சியால் ஆக்கம் அறிக ; புகழ்ச்சியால்

போற்றாதார் போற்றப்படும்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------------

பிறரால் பழிக்கப்படாத வாழ்வை ஒருவன் வாழ்கிறான் என்பதை  அவனது  மக்கள் செல்வங்களின் தகுதியையும் ஒழுக்கத்தையும் வைத்து அறியலாம் !

 

நண்பர்களே கிடையாது என்னும் நிலையை ஒருவன் அடைகிறான் என்பதை, அவனிடம் இருக்கும் செல்வங்கள் அழியத் தொடங்குவதிலிருந்து அறிந்து கொள்ளலாம் !

 

ஒருவன் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருக்கிறான் என்பதை அவனிடம் செல்வம்  மேலும் மேலும் பெருகிக் கொண்டிருப்பதை வைத்து அறியலாம் !

 

அதுபோல், ஒருவன் புகழின் உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறான் என்பதை, அவனது பகைவர்களும் அவனை வணங்குவதை வைத்து  அறியலாம் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

பழி இன்மை = ஒருவன் தான் பழிக்கப்படுதல் இல்லாமையை ; மக்களாற்  காண்க = தன் மக்கட் பேற்றால் கண்டு கொள்க ; ஒருவன் கெழியின்மை = ஒருவன் தனக்கு நட்புரிமை இல்லாமையை ; கேட்டால் அறிக = தனக்குச் செல்வம் கெடுதலால் கண்டுகொள்க ; பொருளின் நிகழ்ச்சியால் = பொருள் வரவினால் ; ஆக்கம் அறிக = ஒருவன் தனது வளர்ச்சியைக் கண்டு கொள்க ; புகழ்ச்சியால் = தான் பலரானும் புகழப்படும் புகழ்ச்சியினால் ; போற்றாதார் = பகைவராலும் ; போற்றப்படும் = ஒருவன் வணங்கப்படுவான்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

ஒருவன் தன் நன்மக்கட் பேற்றினால் பழிக்கப்படுதல் இல்லாதவன் ஆவான் ; நட்பு இயல்பு உடையவனானால் அவனுக்குப் பொருட் கேடு உண்டாகாது ; ஒருவனுக்குச் செல்வம் மேலும் மேலும் பெருகிக்கொண்டு  இருக்குமானால் அதனால் அவனது முற்போக்கு உண்மை அறியப்படும் ; பலரும் புகழும்படி ஒருவன் ஒழுகுவானாயின் அப்பெரும் புகழினால் பகைவரும் அவனை வணங்குவர்.

 

------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக் கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),17]

{03-12-2021}

-----------------------------------------------------------------------------------------------